கவனமெல்லாம் அதில்தான்.. மக்களை மறந்துட்டீங்களே.. முதல்வரை சீண்டிய அண்ணாமலை! பிடிஆர் மீதும் அட்டாக்!
சென்னை : தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால் மக்களை மறந்து விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களை நீண்ட நாட்களுக்கு ஏமாற்றமுடியாது என்பதை திமுக உணரவேண்டும், நீங்கள் உணரவில்லை என்றால் கடந்த காலத்தில் மக்கள் தங்களுக்கு உணர்த்தியதை போல் மீண்டும் உணர்த்துவார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மேலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவு செய்யாமல், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வும் நிலுவை பாக்கியும் வழங்காமல் ஆண்டின் இறுதியில் நிதி பற்றாக்குறையை குறைத்து விட்டோம் என்று பொய்யான பிம்பத்தை திமுக அரசு கட்டமைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு திமுக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனச் சாடியுள்ளார் அண்ணாமலை.

திமுக தேர்தல் வாக்குறுதி தொடர்பாக
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு வாக்களித்த பொதுமக்களை வஞ்சித்து வரும் இந்தத் திறனற்ற திமுக அரசு, அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் கூட விட்டுவைப்பதாக இல்லை. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மறந்திருக்கலாம், பொதுமக்கள் இன்னும் மறக்கவில்லை.

முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை
2021ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 8,60,000. பதிவுசெய்தோரில் வெறும் 2000 பேருக்கு மட்டுமே கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆண்டு TNPSC வழங்கிய அட்டவணையின்படி வெறும் 1,752 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத சூழலே நிலவி வருகிறது. விளம்பரங்களை மட்டுமே தேடிச் செல்லும் இந்த திறனற்ற திமுக அரசு, முதலீடுகளை ஈர்ப்பதில் எவ்வித ஆர்வமும் காட்டுவதாக தெரியவில்லை.

மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் கவனம்
தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால் மக்களை மறந்து விட்டார் முதல்வர். பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த முடியுமா முடியாதா என்ற எந்த புரிதலும் இல்லாமல், அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்குடன் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்கிறார் திறனற்ற திமுக அரசின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 01.01.2022 அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை 01.07.2022 என காலம் தாழ்த்தி வழங்கியது தமிழக அரசு. ஆனால், 6 மாத காலம் தாழ்த்தியதற்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகையை இப்போது வரை வழங்கவில்லை.

மௌனம் சாதிக்கும் அரசு
மேலும், 01.07.2022 அன்று வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது திறனற்ற திமுக அரசு. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவு செய்யாமல், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வும் நிலுவை பாக்கியும் வழங்காமல் ஆண்டின் இறுதியில் நிதி பற்றாக்குறையை குறைத்து விட்டோம் என்று பொய்யான பிம்பத்தை கட்டமைக்க நீங்கள் பாடுபட்டு வருகிறீர்கள்.

மக்களை ஏமாற்ற முடியாது
மக்களை நீண்ட நாட்களுக்கு ஏமாற்றமுடியாது என்பதை திமுக உணரவேண்டும். நீங்கள் உணரவில்லை எனில் கடந்த காலத்தில் மக்கள் தங்களுக்கு உணர்த்தியதை போல் மீண்டும் உணர்த்துவார்கள். இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகையினை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும்" என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications