பாஜக நிர்வாகி கொலை! மாமா வீட்டில் ட்ரஸ் சேஞ்ச்! தண்ணீர் குடித்து சவகாசமாய் எஸ்கேப்பான கொலையாளிகள்!
சென்னை : சென்னையில் பாஜக பிரமுகரான பாலசந்தர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதும், கொலையாளிகள் உறவினரின் வீட்டுக்கு சென்று ரத்தக்கறை படிந்த ஆடைகளை மாற்றிக்கொண்டு , தண்ணீர் குடித்துவிட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை முக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் பாலச்சந்தர். இவர் சென்னை மாவட்ட பாஜக எஸ்சி அணி( பட்டியல் பிரிவு அணி) தலைவராக இருந்தார்.
முன்விரோதம் காரணமாக தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கீழ்பாக்கத்தில் தனது டாக்டர் மனைவியுடன் ஒரு பிள்ளையுடன் வசித்து வந்தார். இவர் சிந்தாதிரிப்பேட்டையில் பெற்றோர் வசிக்கும் தெருவுக்கு அடிக்கடி வந்து செல்வார்.
பாஜக பிரமுகர் கொலை
இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில இந்து அமைப்புகளில் பொறுப்பாளராக பணியாற்றிய இவர்,கடந்த 2016ஆம் ஆண்டு இந்து மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளராக இருந்தபோது பசுமாட்டு தலையை வெட்டி வைத்து, அதை மாற்று மதத்தினர் வைத்ததாக பொய் புகார் கூறி மத கலவரத்தை உண்டாக்க முயன்றது தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர் பாலச்சந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என போலீசார் தெரிவித்தனர். ஒரு நம்பர் லாட்டரி விற்பனை உட்பட சிறுசிறு வழக்குகள் இருந்ததாகவும், c * கேட்டகிரி ரவுடி பட்டியலில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். கடந்த 2019ல் ரவுடி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
போலீஸ் பாதுகாப்பு
இந்து மக்கள் கட்சியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டதால் பாஜகவில் இணைந்த., இவருக்கு அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 காவலர்கள் மாறி மாறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் மெய்ப்பாதுகாவலர் பாலமுருகனுடன், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெரு சந்திப்புக்கு வந்தார். மெய்ப்பாதுகாவலர் பாலமுருகன் அருகிலுள்ள டீ கடைக்குச் சென்று டீ குடித்துக் கொண்டிருந்தார். பாலச்சந்திரன் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தார்.
ஓட ஓட வெட்டிக் கொலை
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் பாலச்சந்தரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம் பிடித்தது. மெய்ப்பாதுகாவலர் கண்முன்னே நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் மெய்ப்பாதுகாவலர் பாலமுருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தர்கா மோகனின் மகன்கள் பிரதீப் சஞ்சய் ஆகியோருக்கும், பாலசந்தருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. அவர்கள் மீது அடிக்கடி காவல் நிலையத்தில் பாலச்சந்தர் புகார் அளித்துள்ளார்.
தர்கா மோகனின் மகன்கள்
எனவே தர்கா மோகனின் மகன்கள் மற்றும் கூட்டாளிகள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில், தர்கா மோகனின் மகன்கள் பிரதீப் சஞ்சய் உள்ளிட்ட 4 பேர் தான் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பாஜக நிர்வாகியை பாலச்சந்தரின் பெரியம்மா மகன்கள் ரூபன் சக்கரவர்த்தி ,தீபன் சக்கரவர்த்தி. இவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் துணிக்கடை வைத்திருக்கிறார்கள்.மீன் கடையில் மாமூல் கேட்ட வழக்கு ஒன்றில் கைதாகி சிறையிலிருந்த தர்கா மோகனின் மகன் பிரதீப், தனது நண்பர் ஜோதி கணேஷ் என்பவரை ஜாமீனில் எடுப்பதற்கு ரூபன் சக்கரவர்த்தியிடம் பணம் கேட்டுள்ளார்.
முன்விரோதம் காரணம்
ரூபன் சக்கரவர்த்தி தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி அனுப்பிவிட்டார். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி சிறையிலிருந்து ஜாமீனில் வந்த பிரதீப் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் ஆகிய இருவரும் ரூபன் சக்கரவர்த்தியின் கடைக்கு சென்றுள்ளனர். அங்கு தீபன் சக்கரவர்த்தி மட்டுமே இருந்தார். அப்போது நாங்க மாமூல் பணம் கேட்டு ஆள் அனுப்பினால் தரமறுக்கிறீர்களா என ஆவேசமாக பேசிய பிரதீப் சஞ்சய் இருவரும் இந்த மாதத்துக்குள் உனது அண்ணன் ரூபன் சக்கரவர்த்தியை கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக ரூபன் சக்கரவர்த்தி தீபன் சக்கரவர்த்தி இருவரும் தங்களது சித்தி மகன் பாலசந்தரிடம் தெரிவித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார்
இதையடுத்து பாலச்சந்தர் தனது பெரியம்மா மகன்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பிரதீப், சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் ,சஞ்சய் மற்றும் அவரது கூட்டாளிகள் நோட்டமிட்டு பாலச்சந்தரை வெட்டி சாய்த்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அகில இந்திய இந்து மகாசபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, அதேபோல கொலையாளிகள் என சந்தேகப்படும் தர்கா மோகனின் மகன்களுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல நட்பில் இருந்துள்ளார். பின்னர் கோடம்பாக்கம் ஸ்ரீ , பெண் விவகாரத்தில் , வழக்கில் சிக்கியதற்கு இவர்தான் காரணம் எனக் கருதியதால் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது.
இரவில் நடந்தது என்ன?
இந்நிலையில் கொலையான பாலச்சந்தர் கொலை நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தனது மெய்ப்பாதுகாவலர் பாலமுருகனை மங்கபதி நாயக்கன் தெருவில் ஒரு டீக்கடையில் டீ சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் காத்திருக்குமாறு சொல்லியிருக்கிறார். ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அருகில் இருக்கும் சாமி நாயக்கன் தெருவுக்கு சென்று வருகிறேன் என பாலச்சந்தர் மெய்ப்பாதுகாவலர் பாலமுருகனிடம் கூறியுள்ளார் என தெரியவருகிறது. மெய்ப்பாதுகாவலர் கூறிய இந்த தகவல் உண்மையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறகு பாலச்சந்தர் மற்றும் அவரது நண்பர் கலைவாணன் இருவரும் சாமி நாயக்கன் தெரு சந்திப்பில் நின்று உள்ளனர்.
தேடுதல் வேட்டை
அப்போதுதான் தர்கா மோகனின் மகன்கள் பிரதீப், சஞ்சய் தலைமையிலான கும்பல் கொலையை அரங்கேற்றியுள்ளது. பாலச்சந்தரின் சகோதரி ஷர்மிளா கொடுத்த புகாரின் பேரில் பிரதீப் சஞ்சய் மற்றொரு கலைவாணன் ஆகிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாரிடம் சிக்கியுள்ள வானவராயன் அருணாச்சலம் இருவரும் கொலையாளி பிரதீப்பின் மைத்துனர்கள்.
சரண் அடைய திட்டமிடும் கொலையாளிகள்
பாலச்சந்தரை கொலை செய்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமம் எம்ஜிஆர் தெருவில் உள்ள தனது மைத்துனர்கள்( ஒரே வீட்டில் வசிக்கின்றனர்) வீட்டுக்கு சென்று ரத்தக்கறை படிந்த ஆடைகளை மாற்றிக்கொண்டு , தண்ணீர் குடித்துவிட்டு பிரதீப் ,சஞ்சய் கலைவாணன் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் இன்று கொலையாளிகள் சரண் அடைய திட்டமிட்டுள்ளனர். அதற்குள் அவர்களை சுற்றி வளைக்க முயற்சி செய்து வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.