நல்லாத்தானே போய்கிட்டிருக்கு! ஸ்பீட் பிரேக் போட்ட பாஜக! ஐ லியோனி மீது போலீசில் புகார்! ஓ அதுக்காகவா?
சென்னை : திமுக கொள்கை பரப்பு செயலாளரும் தமிழக படநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி பட்டியலின சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் கொச்சையாக பேசியதாக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடி பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது .
இதில் தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

திண்டுக்கல் ஐ லியோனி
நிகழ்ச்சியில் பேசிய அவர்," சட்டையை கழட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு நடந்த சமூகத்தை, செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி 'வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர்' அவர்களே என அழைக்க வைத்து திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார் என்றார்.

பெரும் சர்ச்சை
மேலும் "பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டு வெட்டியாக இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி பெண்களுக்கு ஓட்டுரிமைவாங்கித் தந்தது நீதிக் கட்சிஎன்றும் பெண்களுக்கு சொத்துரிமை வாங்கித்தந்தது கலைஞர் என்றும் பெண்களுக்கு அரசியலில் 50% இட ஒதுக்கீடு வழங்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் " என்றும், திண்டுக்கல் லியோனி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக புகார்
இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் பட்டியலின அணியின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திண்டுக்கல் லியோனி மீது புகார் ஒன்றை கொடுத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த "19-ஆம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தி.மு.க.சார்பில் கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றதை சமூக வலைதளங்களில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம்
இதில் தலைமைக் கழக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பட்டியலின சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் கொச்சையாக பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பட்டியலின மக்கள் குறித்து எம்.பி தயாநிதி மாறன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியை தொடர்ந்து லியோனியும் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதாக தெரிவித்துள்ளார்.எ னவே உடனடியாக திண்டுக்கல் ஐ லியோனி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

புரட்சி பாரதம் கட்சி புகார்
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் திண்டுக்கல் லியோனி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில்," பட்டியல் இன மக்களுக்கு வழங்கிவரும் இட ஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தி பேசியும் வன்முறையை தூண்டும் வகையில் கெட்ட நோக்கத்தோடு சாதிய வன்மத்தோடு பேசிய திண்டுக்கல் லியோனி மீது எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications