தேமுதிக.. பாமக.. பாஜக.. ஹாட் ட்ரிக் விக்கெட் காலி.. தனித்து விடப்பட்ட எடப்பாடி.. ஆ அப்போ திமுக?
சென்னை: அதிமுக பாஜக கூட்டணி முறிவு திமுகவிற்கு சாதகமாக முடியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளிடம் ஒற்றுமை இன்மை நிலவுவது திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் சாதகமாக முடியலாம்.
தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணி அமைத்து திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டம் ஒன்றில் முழக்கமிட்டு இருந்தார். அவர் எப்போது சொன்னாரோ அப்போதில் இருந்தே பாஜக கூட்டணியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்ட வண்ணம்தான் உள்ளது.

சமீப நாட்களாக நடக்கும் விஷயங்களை பார்த்தால் எங்கே அதிமுக மெகா கூட்டணி மட்டுமல்ல சாதாரண சின்ன கூட்டணியே கூட அமைக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ண தோன்றுகிறது.
ஒரு பக்கம் அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கு இடையில் கடுமையான கருத்து மோதல் உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி கருத்து தெரிவித்து மோதி வருகின்றனர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி என்ன ஆகும் என்பதே ஒரு பக்கம் கேள்வியாக நிலவியது. அதன்படியே அவர்கள் கூட்டணி இன்று முறிந்துள்ளது. முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.
இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார்.
இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்தே அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது அதிமுகவின் முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கூட்டணி: கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது.
தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதன்பின் நயினார் நாகேந்திரன் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்ததால் பாஜக - அதிமுக கூட்டணியும் உடைந்தது. சமீபத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள்.
பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார் என்று வெளிப்படையாக திமுகவிற்கு ஆதரவாக கூறினார். இதனால் திமுகவோடு பாமக கூட்டணி வைக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் சொன்ன அன்புமணி, திமுகவோடு கூட்டணி இல்லை. அதிமுகவுடனும் கூட்டணி இல்லை. நாங்கள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம், என்று கூறினார்.
பாமக முற்றுப்புள்ளி: அதன்பின் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட.. நாங்கள் அதிமுகவின் கூட்டணியில் இல்லை. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று கூறினார். அதிமுகவுடன் இணையும் எண்ணத்தில் பாமக இல்லை. உடைந்த அதிமுகவில் இணைந்தால் பயன் இல்லை என்று நினைக்கிறார்.
எடப்பாடியும் இன்னும் தான்தான் ஒட்டுமொத்த அதிமுக என்பதை நிரூபிக்கவில்லை. தொண்டர்கள் எல்லோரும் தன் பக்கம் இருக்கிறார்கள். தேர்தலில் நின்றால் வெற்றிபெறுவேன் என்பதை எடப்பாடி நிரூபிக்கவில்லை. இதனால் பாமக இவர்களுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்வி உள்ளது.
தேமுதிகவும் இவர்களின் கூட்டணியை முறித்துக்கொண்டது. இப்படி பாமக, பாஜக, தேமுதிக எல்லாம் கூட்டணியை அதிமுகவுடன் முறித்துக்கொண்டதால், அதிமுக ஒற்றை மரமாகி உள்ளது. தேர்தல் அரசியல் ரீதியாக திமுகவிற்கு இது சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக திமுக கூட்டணி தற்போது வலுவாக உள்ளது. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள், விசிக, காங்கிரஸ் என்று கட்சிகள் எல்லாம் நெருக்கமான கூட்டணியுடன் இந்திய கூட்டணியில் உள்ளது.
இதனால் அதிமுக பாஜக கூட்டணி முறிவு திமுகவிற்கு சாதகமாக முடியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளிடம் ஒற்றுமை இன்மை நிலவுவது திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் சாதகமாக முடியலாம்.












Click it and Unblock the Notifications