ஆவேசமாக கோவை பந்த்துக்கு அழைப்பு.. ஹைகோர்ட் போட்ட ஒரே போடு.. "ஆளைவிடுங்க சாமி.." பல்டியடித்த பாஜக!
சென்னை : கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திட்டமிட்டபடி பந்த் நடத்துவோம் என காலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்ட நிலையில் கோவையில் பந்த் நடத்த எந்த அறிவிப்பையும் தான் வெளியிடவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பு கூறி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவையில் கடந்த 23ஆம் தேதியன்று காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து அக்டோபர் 31-ம் தேதி பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் முழு அடைப்பு
நாடளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டும் பாஜகவினர் முழு அடைப்பு அறிவித்துள்ளனர். சட்டத்துக்கு புறம்பாக கடைகளை அடைக்க சொன்னாலும், மிரட்டினாலோ மக்களை துன்புறுத்தினாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுத்து வானதி சீனிவாசன் காரசார அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்தார்.

பயப்படாத பாஜக
அதில்,"தி.மு.க. ஆட்சியில் தான், மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ம் தேதி திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தான் அமைச்சர் கோவைக்கு வந்திருக்கிறார் என்பது அவரது பேட்டியிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது. முழு அடைப்பு போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப்போராட்டம். அமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் பா.ஜ.க. ஒருபோதும் அஞ்சாது என கூறியிருந்தார்.

கோர்ட்டில் வழக்கு
இதனிடையே கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடைவிதிக்க கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத்அ சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

அண்ணாமலை அனுமதிக்கவில்லை
இந்த வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் இந்த பந்த் நடத்த மாநில தலைமை அழைப்பு விடுவிக்கவில்லை என்றும், கட்சியின் மாவட்ட நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதவும், பந்த் நடத்துவதா அல்லது வேறு என்ன வகையான போராட்டம் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருக்கலாம் என்றும், அதனை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

பல்டியடித்த பாஜக
முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது சிபி ராதாகிருஷ்ணன் என்ற தனிநபர் தான். செய்தியாளர் சந்திப்பில் சிபி ராதாகிருஷ்ணன் அறிவித்ததை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதன் மூலம் நடவடிக்கைக்கு பாஜக பயந்து பல்டியட்டித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications