4 நடிகைகள்.. வாயை விட்ட திமுக சைதை சாதிக்.. வளைக்கும் பாஜக.. போலீசில் பரபர புகார்
சென்னை: திமுக பொதுக்கூட்டத்தில் பாஜகவில் 4 நடிகைகள் இருப்பதாக குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை ஒருமையிலும் இரட்டை அர்த்தத்திலும் பேசிய சைதை சாதிக் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
திமுக தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 வது முறையாக தேர்வுசெய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஆர்.கே.நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் உரையாற்றிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு உள்ளிட்ட 4 நடிகைகளை ஒருமையிலும், இரட்டை அர்த்தத்திலும் பேசியது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

சர்ச்சை பேச்சு
பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள் என்று குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு ஒருமையில் பேசிய சைதை சாதிக, "பாஜகவில் இருக்கும் தலைவர்களை பொறுத்தவரை 4 பேருமே ****." என்று 4 நடிகைகளை குறிப்பிட்டு ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தினார். "

இரட்டை அர்த்தம்
குஷ்பு தாமரை மலர்ந்தே தீரும் என்று தலை மேல் கையை உயர்த்தி சொல்கிறார்." என்று ஒருமையில் பேசிய சாதிக், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமுடி பற்றியும் விமர்சித்து பேசியுள்ளார். குஷ்பு திமுகவில் இருக்கும்போது அவரை வைத்து இளைய அருணா கூட்டம் கூட்டியதை இரட்டை அர்த்தம் தரும் வகையில் சைதை சாதிக் பேச அங்கு சிரிப்பலை எழுந்தது.

குஷ்பு கண்டனம்
சைதை சாதிக் பேச்சு பற்றி ட்விட்டரில் பதிவிட்ட குஷ்பு, "பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களிடம், அவர்கள் வளர்ந்த விதம் மற்றும் அவர்கள் வளர்க்கப்பட்ட நச்சுத்தன்மையான சூழலை பார்க்க முடிகிறது. ஒரு பெண்ணின் கருப்பையை ஆண்கள் அவமதிக்கிறார்கள். இந்த ஆண்கள்தான் தங்களை கலைஞரின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியா?" என்று கேள்வி எழுப்பினார்

கனிமொழியின் மன்னிப்பு
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த திமுக எம்பி கனிமொழி, "பெண்ணாகவும், மனிதராகவும் இந்த பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பேசப்பட்ட இடம், அவரது கட்சி எதுவாக இருந்தாலும் இந்த பேச்சை ஏற்க முடியாது. இதற்கு வெளிப்படையாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சர் முக ஸ்டாலினாலும், திமுகவாலும் இந்த பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது." என்றார்.

காவல்நிலையத்தில் புகார்
இதற்காக கனிமொழிக்கு நன்றி கூறிய குஷ்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணியினர் புகாரளித்து இருக்கிறார்கள். மாநில பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புகாரளித்துள்ளனர்.

திமுகவுக்கு எச்சரிக்கை
இந்த புகாரை மத்திய குற்றப்பிரிவு ஆணையருக்கு விசாரணைக்காக அனுப்புவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நதியா, திமுகவினர் பெண்களை அவதூறாக பேசினால் தேர்தல் நேரத்தில் பதிலடி கொடுப்போம். ஏன் கட்சி ரீதியாக சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்ந்தால் போராட்டம் நடத்துவோம்." என்று எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications