பாஜகவில் பிரளயத்தை உருவாக்கி வரும் கேசவ விநாயகம் மீது விரைவில் நடவடிக்கை? வெல்லப் போகிறாரா அண்ணாமலை?
சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் அதன் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம். அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என ஆர்.எஸ்.எஸ். க்ரீன் சிக்னல் காட்டிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக என்பது பிராமணர்களின் கட்சி என்றே அறியப்பட்டிருந்தது. பிராமணர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்காக மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் அறிக்கையின் பரிந்துரை அமல்படுத்தப்பட்ட போது வட இந்தியாவே பற்றி எரிந்தது.
மண்டல் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைக்கு எதிரான போராட்டத்தை பாஜக முன்னெடுத்தது. அத்துடன் பாஜகவின் பெரும்பான்மை நிர்வாகிகளும் பிராமணர்களாகவே இருந்தனர். பாஜகவில் பிராமணர் அல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய காலமும் இருந்தது. ஆனால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் இந்திய அரசியலையே தலைகீழாக புரட்டிப் போட்ட போது பாஜகவும் அதற்கு தப்பவில்லை.
'கருணாநிதி காங்கிரஸ்’.. 2015ல் கோவை செல்வராஜ் கட்சி மாறியது இதற்குத்தான்.. இன்று அப்படியே 'பல்டி’!
பிராமணர் அல்லாத தலைவர்கள்
பாஜகவிலும் பிராமணர் அல்லாத தலைவர்கள் உருவெடுத்தனர்.. மெல்ல மெல்ல பிராமணர்களின் மேலாதிக்கம் குறைந்து பிராமணர் அல்லாத சமூகத்தினர் பரவலாக பாஜகவில் விஸ்வரூபம் எடுத்தனர். இது பாஜகவுக்கு பல மாநிலங்களில் அரசியல் ரீதியாக ஆதாயம் தந்தது. பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கவும் இது உதவியது. இதன் உச்சம்தான் பிராமணர் அல்லாத சமூகத்தை சேர்ந்த நரேந்திர மோடி, பாஜக அரசாங்கத்தில் பிரதமராக தொடர்ந்து பதவி வகித்தார்.
தலித் கிருபாநிதி, முருகன்
இந்த மாற்றங்கள் தமிழக பாஜகவில் நிகழ்ந்தது. தமிழக பாஜக தலைவராக தலித்தான கிருபாநிதி நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது ஜாதிய அடிப்படையில் பிராமணர் தலைவர்கள் அவரை படுத்தியபாட்டால் அரசியலைவிட்டே வெளியேறிவிட்டார் கிருபாநிதி. ஆனால் தலித் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன், பின்னாளில் தமிழக பாஜக தலைவரானது; மத்திய இணை அமைச்சரானது; பிராமணர் அல்லாத சமூகத்தின் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக்கப்பட்டது; இப்போதும் பிராமணர் அல்லாத அண்ணாமலை பாஜக தலைவராக இருப்பதும் தமிழக அரசியலுக்கு பாஜகவுக்கு அவசியமானதாக இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.
அதேநேரத்தில் என்னதான் இப்படி மேம்போக்கான பார்வையும் போக்குகள் இருந்தாலும் கட்டமைப்புக்குள் இன்னமும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ன் பிடி இருக்கவே செய்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைமை பீடத்துக்கு பிராமணர் மட்டுமே வர முடியும். அந்த இயக்கம் வர்ணாஸ்ரம தர்மத்தை பாதுகாக்கிறது. தமிழக பாஜகவுக்கு எத்தனை பேர் தலைவராக வந்தாலும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளே ஆர்.எஸ்.எஸ்.-ன் நிழல் இருப்பார். அப்படியான ஒரு நிழல்தான் கேசவ விநாயகம்.
கேசவ விநாயகம்
தமிழக பாஜகவுக்கு தலைவராக அண்ணாமலை இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ், பாஜக மேலிடம் தந்த சுதந்திரங்களால் அண்ணாமலையின் செயல்பாடுகளில் தலையீட்டை செய்து கொண்டே இருந்தார் கேசவ விநாயகம். நிர்வாக அமைப்புகளுக்கு அண்ணாமலை நியமிக்கும் நபர்களை மாற்றுகிற சர்வ வல்லமை கொண்டவராகவும் கேசவ விநாயகம் இருந்தார். ஆர்.எஸ்.எஸ்.-ன் முக்கிய முகமாக கருதப்படுகிறவர்தான் இந்த கேசவ விநாயகம்.
திருச்சி சூர்யா
திருச்சி சூர்யா மூலமாக கேசவ விநாயகம் எனும் நபர் குறித்த பல்வேறு விவகாரங்கள் வெளியே வந்துள்ளது. கேசவ விநாயகத்தால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை ஞானியாக சித்தரிக்கின்றனர். ஆனால் திருச்சி சூர்யா போன்றவர்கள், பாஜகவுக்கு புதைகுழியாக கேசவ விநாயகம் இருப்பார் என்கின்றனர். ஆகையால் கேசவ விநாயகத்தை மாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் பாஜகவை விட்டு சூர்யா விலகி இருக்கிறார்.
கேசவ விநாயகம் நீக்கம்?
இதனிடையே சர்ச்சைகளில் சிக்கிய கேசவ விநாயகம் குறித்து ஆர்எஸ்எஸ், பாஜக மேலிடம் விசாரணை நடத்திவிட்டது; அவரை நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் கேசவ விநாயகம் குறித்த சர்ச்சை தொடரும் வகையில் செய்திகள் வெளியானால் அவரை வெளியேற்றுவது எளிது என அவருக்கு எதிர்தரப்பு தீவிரமாக காய்நகர்த்திக் கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதிதான் திருச்சி சூர்யா விலகலும், கேசவ விநாயகத்தை நீக்குங்கள் என்ற கோரிக்கையும் என்கின்றன சில வட்டாரங்கள். ஆக கேசவ விநாயகம் கார்னர் செய்யப்பட்டுவிட்டார்?