பல்க்கா அள்ளப்போறாராமே.. பெரிய ‘லாஸ்’! டெபாசிட் பெறுவாரா எடப்பாடி? இப்படி ஒரு நிலை.. சொல்றது யாரு?
பாஜக, பொது வேட்பாளரை நிற்க வைக்க திரைமறைவில் முயற்சிகள் நடப்பதாக பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக இரண்டு பிரிவுகளாக அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சீமானுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதிமுகவில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் உதயநிதி இளைஞரணி செயலாளரான பிறகு திமுகவிற்குச் சென்றுவிட்டனர். மீதமுள்ளவர்கள் சீமான் பக்கம் சாய்ந்து வருகின்றனர். எனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சீமான் கூடுதல் வாக்குகளைப் பெறுவார் எனக் கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக என பலமுனைப் போட்டி நிலவுகிறது. இதனால், வாக்குகள் நாலாபுறமும் சிதறும் என்பதால், பல கட்சிகள் டெபாசிட்டுக்கே போராடும் சூழல் ஏற்படக்கூடும் என்ற நிலை இருக்கிறது.
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், காங்கிரஸை தவிர எடப்பாடி பழனிசாமி அணி மட்டுமே டெபாசிட்டை நெருங்க வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.
டெல்லிக்கு பறக்கும் 'இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் 'பளிச்’!
களத்தில் சண்முகம்?
கேள்வி : ஈபிஎஸ், ஓபிஎஸ் எல்லோரும் ஒதுங்கி நின்று பொதுவான வேட்பாளரை நிறுத்த வாய்ப்பிருக்கிறதா?
பதில் : ஏசி சண்முகத்தை நிற்க வைக்கும் பேச்சு பாஜக வட்டாரத்திலும் இருக்கிறது. ஏசி சண்முகம் சாதி ரீதியாக ஈரோடு கிழக்கில் ஓரளவு செல்வாக்கு மிக்கவர். அவரை நிற்க வைக்க முடியுமா என்ற முயற்சிகளும் திரைமறைவில் நடக்கின்றன. ஏசி சண்முகம் தொடர்ந்து தோல்விகளைத் தழுவி வருவதால், இப்போது களமிறங்க அவர் யோசிக்கிறார். ஆனால், அவரை பொது வேட்பாளராக களமிறக்குவது சிறந்த மூவாக இருக்கும். அதிமுகவின் 2 பிரிவுகள், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரிக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர் திமுக கூட்டணிக்கு டஃப் கொடுப்பார். ஆனால், அதை ஈபிஎஸ், ஓபிஎஸ் செய்வார்களா என்பது மிகப்பெரிய கேள்வி. அப்படி நடந்தால், அதிமுக பிரச்சனை கொஞ்சம் தணியும். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இந்த மோதலை சரிசெய்ய பாஜகவுக்கு நேரம் கிடைக்கும். அதற்குள் இரு அணிகளுக்குள் மனமாற்றம் ஏற்பட்டு இணையும் முடிவையும் எடுக்கக்கூடும். காலம் தான் சில காயங்களை ஆற்றும்.
நம்பர் கேம்
கேள்வி : அதிமுகவின் இரு அணிகளும் நூற்றுக்கணக்கான பொறுப்பாளர்களை இடைத்தேர்தலுக்கு நியமித்துள்ளனர். டிடிவி தினகரன் 250 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார். எதற்காக இந்த ‘நம்பர் கேம்' ஆடுகிறார்கள்?
பதில் : திமுக 33 பேரைத்தான் தேர்தல் பணிக்குழுவில் அமைத்துள்ளது. திமுக நினைத்தால் 500 பேரை கூட போடலாம். எங்கள் கட்சியில் தேர்தல் பணியாற்ற பலர் ஆர்வமாக இருக்கிறார்கள், சீரியஸாக வேலை செய்கிறோம், எங்களிடம் ஆள் பலம் இருக்கிறது என்று காட்டுவதற்காக நூற்றுக்கணக்கில் பொறுப்பாளர்களை நியமிக்கிறார்கள். எந்தக் கட்சியாக இருந்தாலும், தேர்தல் பணிக்குழுவுக்கு ஆட்களை எத்தனை பேரை நியமிக்கிறார்கள் என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களை திருப்திப்படுத்துவதற்கான வேலைதான். இடைத்தேர்தலில் இயல்பாகவே ஆளுங்கட்சிக்கு சில சாதகங்கள் இருக்கின்றன.
டெபாசிட் கிடைக்குமா?
கேள்வி : 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளருக்கும் இரட்டை இலை சின்னத்தில் நின்ற தமாகா யுவராஜுக்கும் இடையே சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது. அப்போது மநீம 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது அதிமுக கூட்டணி சிதறியிருக்கிறது. அதேசமயம் மநீம திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறது. இதனால், இன்னும் திமுக கூட்டணி பலம் பெறுகிறது. ஆக, காங்கிரஸ் தவிர்த்து மற்றவர்கள் டெபாசிட் வாங்க வாய்ப்பிருக்கிறதா?
பதில் : ஈரோடு கிழக்கில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகள் இருக்கின்றன. இதில் 1 லட்சத்து 60 ஆயிரம் வரை வாக்குப்பதிவாக வாய்ப்புகள் இருக்கின்றன. இதில், காங். வேட்பாளர் 1 லட்சம் ஓட்டுகள் வரை வாங்க வாய்ப்பிருக்கிறது. திமுகவின் நோக்கம், ஈபிஎஸ்ஸை 20 ஆயிரத்துக்கு மேல் போக விடக்கூடாது என்பதாக இருக்கிறது. நாம் தமிழர் கட்சி தங்கள் வாக்குகளை 11 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக உயர்த்த முயற்சிக்கும். ஓபிஎஸ்ஸுக்கு 10 ஆயிரத்தை தாண்டுவதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, ஓபிஎஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோருக்கு டெபாசிட் போக வாய்ப்பிருக்கிறது. ஈபிஎஸ், டெபாசிட்டை காப்பாற்றிக் கொள்வார் என்றே நான் நினைக்கிறேன். எடப்பாடியை டெபாசிட் இழக்கச் செய்வதுதான் திமுகவின் டார்கெட்டாக இருக்கிறது. அதை நோக்கியே அவர்கள் செயல்படுகிறார்கள்.
சீமானுக்கு அதிக வாய்ப்பு
கேள்வி : அதிமுக வாக்குகள் சீமான் பக்கம் மாறுவதாகச் சொல்லப்படுகிறது. இடைத்தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் என மூவர் களமிறங்கும்போது அவர்களை மீறி வர சீமானுக்கு வாய்ப்பிருக்கிறதா?
பதில் : அதிமுக இரண்டு பிரிவுகளாக அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சீமானுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மாநில அரசை குற்றம்சாட்டுவதில் சீமானுக்கு நிறைய பாயிண்டுகள் இருக்கின்றன. சிறுபான்மையினர் வாக்குகளிலும் ஒரு குறிப்பிட்ட அளவை சீமான் பெற்றுவிடுவார். ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் இப்போதைக்கு செல்ல வாய்ப்பில்லை. அதிமுகவில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் உதயநிதி இளைஞரணி செயலாளரான பிறகு திமுகவிற்குச் சென்றுவிட்டனர். மீதமுள்ளவர்கள் சீமான் பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதிமுகவில் இளைஞர்கள் சேர்வது வெகுவாகக் குறைந்துவிட்டது. ஏற்கனவே இருந்த இளைஞர்களும் விரக்தியில் இருக்கிறார்கள். பலர் பாஜக, திமுக, நாதக ஆகிய கட்சிகளில் சேர்ந்துவிட்டனர்.