மெகா கூட்டணி அமைப்போம் என்கிறார் தமிழிசை.. ஆனா கண்ணுக்கு எட்டின தூரம் வரை ஆள காணோமே!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கூட்டணி குறித்து முடிவு செய்துவிட்ட நிலையில், பாஜகவோ மெகா கூட்டணி குறித்து பேசி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் எப்போதும் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது. இதனால் கூட்டணி பேரங்களும், பிரசார கூட்டங்களும் களைக் கட்ட தொடங்கிவிட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் வீடியோ கான்பிரன்ஸிங்கில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தங்கள் கட்சி தமிழகத்தில் யாருடனும் கூட்டணி அமைக்காது.
நண்பர்கள்
எனினும் கூட்டணிக்காக கதவுகள் திறந்தே உள்ளது. தங்களுடன் புதியவர்களும் வாஜ்பாய் காலத்தில் கூட்டணி அமைத்த பழைய நண்பர்களும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாகவும் மோடி தெரிவித்திருந்தார்.
பாஜகவுடன் கூட்டணி
பழைய கூட்டணி கட்சியினர் என்றால் தமிழகத்தை பொருத்த வரை திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, ஆகியன ஆகும். இதில் திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைத்து விட்டது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை என அடித்து கூறிவிட்டது.
இடைத்தேர்தல்
அதுபோல் மதிமுகவு்ம பாஜகவுடன் கூட்டணிக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என கூறிவிட்டது. இந்நிலையில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் பின்னர் சட்டசபை தேர்தல் இல்லை, இடைத்தேர்தலிலேயே அதற்குரிய பலனை அனுபவித்துவிடுவர்.
கட்சியே தொடங்காத ரஜினி
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் குறித்து கேட்கவே வேண்டாம். நிச்சயம் அக்கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்காது. ரஜினிகாந்தை மோடி குறிப்பிடுகிறாரா என்று பார்த்தால் அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை.
இதர கட்சிகள்
தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி என முக்கிய கட்சிகள் யாரும் பாஜகவுடன் செல்ல விரும்பவில்லை. இப்படியிருக்கையில் மோடி எந்த நம்பிக்கையில் கூட்டணி அமையும் என்று கூறினார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வெற்றுவேட்டு
அதுபோல் தமிழிசையும் பாஜகவுக்கு மெகா கூட்டணி அமையும் என்கிறார். மேற்கண்ட கட்சிகள், ஜேடிஎஸ் ஆகியவற்றை தவிர்த்து இதர கட்சிகள் எல்லாம் தேசிய அளவிலான கட்சிகள் அல்லாமல் உள்ளூர் கட்சிகளாக உள்ளன. அஸ்ஸாம் மாநில கன பரிஷத் போன்ற கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டன. ஆர்ஜேடி கட்சியும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது சந்தேகம்தான் என்ற நிலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆளே இல்லாதபோது மெகா கூட்டணி அமைப்போம் என்பது ஏதோ பாஜக தங்களை தாங்களே சமாதானப்படுத்தும் முயற்சியாகவே உள்ளது.