மத்திய அரசு அனுமதி.. தமிழக அரசு அனுமதி மறுப்பது ஏன்?.. மதுரை எய்ம்ஸ் குறித்து அண்ணாமலை கேள்வி
சென்னை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், மாநில அரசு மறுப்பது ஏன்? என்றும் பாஜக மாநிலத் தலைவர் K.அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் K.அண்ணாமலை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை தோப்பூர் பகுதியில் ரூ.1,264 கோடி செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டினார்.
நிலம் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு ஜைக்கா நிதி நிறுவனத்துடன் 2021-ம் ஆண்டு மார்ச் 26 ந்தேதி ஒப்பந்தம் ஏற்படுத்தியது.

கல்லூரி கட்டிடம்
இந்தநிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துமனை சார்பில் மருத்துவம் படிக்க 150 புதிய மாணவர்களுக்கான சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும், கல்லூரிக் கட்டிடம் இல்லாத பட்சத்தில், வேறு இடத்தில் வகுப்புகளை தொடங்கலாம் என்றும், மாணவர்கள் 2 ஆண்டுகள் படித்து முடிக்கும்போது, எய்ம்ஸ் வளாகத்தில் கல்லூரி கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு மாணவர்களை இடமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியது.

தற்காலிக இடம்
மத்திய அரசு தமிழகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில 150 மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்தும், அதனை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது. தற்காலிக இடங்களில் அமைக்கத் தயக்கம் இருந்தால் ஜிப்மர் மருத்துவமனையில் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனியார் கலைக் கல்லூரிகளில் அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகளில் புதிய ஜிப்மர் மருத்துவமனை மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது. இதில் எந்த யோசனையும் ஏற்றுக்கொள்ள உகந்ததாக இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியம் மறுத்துள்ளார்.

என்ஐஐடி
எய்ம்ஸ் கட்டப்படும் மற்ற மாநிலங்களில் தற்காலிக இடங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பினைத் தொடங்கிவிட்டார்கள். கட்டிடம் முடியும் போது அவர்கள் புதிய கல்லூரியில் தங்கள் படிப்பினைத் தொடர்வார்கள். திருச்சியில் IIM தொடங்கிய போது, கட்டுமானத்திறகு முன்பே புதிய மாணவர்கள் NIIT ல் கல்வி பயின்றார்கள்.

அண்ணாமலை கோரிக்கை
ஆகவே மாநில அரசு, மத்திய அரசின் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் நிலை எடுத்து போராடிக்கொண்டு இருந்தால் மாநிலத்தின் மக்கள் நலன் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை விடுத்து உடனடியாக 150 ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications