எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
சென்னை: ஒரே வாக்குச்சாவடியில் வாக்களித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்தனர்.
18வது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தமிழ்நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தமிழிசை சௌந்தரராஜன் வழக்கம்போல் இந்த முறையும், சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
சென்னை சாலிகிராமத்தில் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்தனர்.
தேமுதிக, இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிடுகிறது. தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன், முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் எதிர் எதிர் அணியில் உள்ள நிலையில் தமிழிசை சௌந்தரராஜன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர், ஓட்டு போட வந்தபோது நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட நிலையில், கைகுலுக்கி மகிழ்ந்து பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனும், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.











Click it and Unblock the Notifications