சரிப்பட்டு வராது.. டெல்லி விட்ட "டோஸ்".. தமிழக பாஜக எடுத்த புது ஆபரேஷன்! அடுத்த 60 நாட்கள் முக்கியம்
சென்னை: தமிழ்நாடு முழுக்க பூத் வாரியாக கட்சியை வலுப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய ஆபரேஷன் ஒன்றையும் பாஜக கையில் எடுத்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருவதாக இருந்தது. கோவை பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களை அவர் திறப்பதாக இருந்தது.
ஆனால் கேரளா வரை பல்வேறு நிகழ்வுகளுக்காக வந்த அமித் ஷா கடைசி நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் சிலர் மீது இருந்த கோபம் காரணமாக அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்று அப்போது செய்திகள் வந்தன.
அமித் ஷா மகனுக்கு ஒரு சட்டம்.. அமைச்சர் பொன்முடி மகனுக்கு ஒரு சட்டமா.. கொந்தளிக்கும் சிவி சண்முகம்!
பாஜக தலைவர்கள்
அதன்படி தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள் அதிகம் பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்பாடு குறைவாக உள்ளது. கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது. முக்கியமாக பூத் கமிட்டியை வலுப்படுத்தவில்லை என்ற கோபம் அமித் ஷாவிற்கு இருந்ததாக கூறப்பட்டது. தமிழ்நாட்டில் பூத் வாரியாக பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்று அமித் ஷா அதற்கு முந்தைய பயணத்தின் போதே கட்டளை போட்டு இருந்தார். ஆனால் இன்னும் பூத் வாரியாக பாஜகவிற்கு ஆள் பிடிக்க முடியவில்லை. பாஜக இதில் இன்னும் பின்னடைவை சந்தித்தே வருகிறது.
பூத்
பாஜக என்றாலே பூத் ரீதியாக அவர்களுக்கு இருக்கும் வலிமைதான். பூத் கமிட்டியை அமைத்து அதன் மூலம் ஆட்களை பிடிப்பதுதான் பாஜகவின் தேர்தல் வியூகம். பல மாநிலங்களில் பாஜகவிற்கு இது சாதகமான முடிவை கொடுத்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜக பூத் வாரியாக இன்னும் வலிமை அடையவில்லை. இதுதான் அமித் ஷாவின் கோபமும் ஒரு காரணம் என்கிறார்கள். இதன் காரணமாகவே தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளை அமித் ஷா சந்திக்க மறுத்தார்
அமித் ஷா விட்ட டோஸ்
இந்த நிலையில்தான் டெல்லி தரப்பில் இருந்து தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு பூத் தொடர்பாக முக்கியமான ஆலோசனை ஒன்று வழங்கப்பட்டு உள்ளதாம். அதன்படி இப்போதே ஏரியா வாரியாக பூத் கமிட்டியை அமையுங்கள். உடனே பூத் கமிட்டியை உருவாக்கும் வேலையை பாருங்கள். பாஜகவை அடி மட்டத்திலிருந்து வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுங்கள் என்று டெல்லியில் இருந்து தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக தலைவர்களுக்கு டோஸ் விடப்பட்டு உள்ளதாம்.
ரெடி
இதையடுத்தே தற்போது மாவட்ட வாரியாக பூத்களை அமைக்கும் பணிகளை பாஜக முடுக்கி விட்டு உள்ளது. இதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு மாவட்டங்களில் பூத்களுக்கு சென்று பார்வையிட இருக்கிறார். அடுத்த இரண்டு மாதங்கள் அவர் மக்களை நேரில் சென்று சந்திக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்காக பாஜக சார்பாக எனது பூத் வலிமையான பூத் எனும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல்
அடுத்த லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்கும் திட்டத்திலும் அக்கட்சி உள்ளது.பூத் அளவில் பாஜகவிற்கு 10- 15 ஆட்கள் இருந்தால்தான் பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் வசதியாக இருக்கும். இதை கருத்தில் கொண்டே பாஜக தற்போது பூத் கூட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளதாம். எனது பூத் வலிமையான பூத் எனும் திட்டம் தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.