கிராமங்களுக்கும் கொரோனாவை பரப்பவா இந்த கூட்டம்?
சென்னை: சென்னையிலும், கோவையிலும், திருப்பூரிலும் அல்லது பெங்களூரிலும் நேற்று மாலை நாம் கண்ட காட்சி நமது சமூகத்தின் மனசாட்சியை ஓங்கி தட்டி எழுப்புவது போல இருந்ததை யாரெல்லாம் கவனித்தீர்கள்?
Recommended Video
மாநிலம் முழுக்க செவ்வாய்க்கிழமை ம்லை 6 மணிக்கு மேல் 144 தடை உத்தரவு, அதற்கு பிறகு அனைத்து மாவட்ட எல்லைகளும்ம் சீல் வைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பு எதற்காக என்றால், மக்கள் என்னதான் சொன்னாலும் சொல்பேச்சு கேட்பதில்லை, வீட்டை விட்டு வெளியே வந்த வண்ணம் இருக்கிறார்கள், இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரித்து விடும் என்பதால்.
அந்தந்த மாவட்டங்களுக்கு அவரவர் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் இந்த ஏற்பாடு இது. அருமையான உத்தரவு என்பதுதான் பலரின் கருத்து. இருந்தாலும் இதை ஒரு வாரத்திற்கு முன்பே செய்து இருக்க வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

சமூக விலகல் என்ன ஆனது
"Something is better than nothing" என்று சொல்வார்களே.. அதுபோல இப்போதாவது இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில்தான், இந்த விபரீதம் அரங்கேறியது. ஏதோ பொங்கலுக்கும், தீபாவளிக்கும் விடுமுறை விட்டால், பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி கூட பயணம் செய்வார்களே அதுபோல, அடித்துப்பிடித்து தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றனர் மக்கள். கண்டிப்பாக வைரஸ் தாக்கம் எத்தகையது என்பதை அறிந்து வைத்து உள்ளவர்களுக்கு கண்களில் ரத்தக் கண்ணீரே வந்துவிட்டது இதைப்பார்த்து. சமூக விலகல் என்று ஒட்டுமொத்த உலகமும், கரடியாக கத்திக் கொண்டு இருக்க.. நம் தமிழகத்தில் அதை சல்லி சல்லியாக உடைத்த தருணம் இது.

குறைந்த பஸ் காரணம்
பஸ் போக்குவரத்தை அரசு குறைத்து இயக்குகிறது. மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான், அதையாவது இயக்குவோம் என இயக்குகிறது அரசு. ஆனால் இவர்கள் பிக்னிக் செல்வது போல சொந்த ஊர்களுக்கு, கூட்டமாக கிளம்பிச் செல்கிறார்கள். பல பஸ்களிலும் உட்கார சீட் கிடைக்காவிட்டாலும், நின்று கொண்டே பயணித்துள்ளனர். எத்தகைய மக்கள் நெருக்கத்துக்கு நடுவே இவர்கள் பயணித்துள்ளனர் என்பதையும், அதில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தாலும் ஒட்டுமொத்த பஸ் பயணம் மேற்கொண்டவர்களுக்கு மட்டுமின்றி, ஊருக்கு சென்றதும், அவர்கள் குடும்பம், அவர்கள் நண்பர்கள் குடும்பம்.. ஏன் அந்த ஊரில் உள்ள பலருக்கும் இது பரவி விடுமே என்ற அபாயத்தை நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

கிராமங்களில் பரவ வாய்ப்பு?
நமது மக்களிடம் இருக்கக்கூடிய விழிப்புணர்வு என்பது இவ்வளவுதானா? மனிதவளம், கல்வியறிவு உள்ளிட்ட அனைத்திலும் நாட்டுக்கே முன்னோடியாக உள்ளது தமிழகம். ஆனால், கொரோனா எச்சரிக்கைக்கு நடுவே, பஸ்ஸில் நம்மவர்கள் தொங்கிக்கொண்டு சென்ற இந்த காட்சியை பார்த்துவிட்டு மொத்த நாடும் நம்மைப் பார்த்து நகைக்கிறது. இப்போதுவரை வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருகை தந்தோர் மற்றும் அவர்களிடம் பழகியவர்களுக்குதான் கொரோனா வைரஸ் பரவியிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள நகரங்களில் இருந்து இப்படி கூட்டம் கூட்டமாக கிளம்பி சென்ற மக்கள், இந்த பாதிப்பு அதிகம் எட்டிப்பார்க்காத கிராமங்களிலும் இதை அடுத்தடுத்த நாட்களில் பரப்பி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கட்டமைப்பு
கிராமப்புறங்களில் நகரங்களைப் போல மருத்துவமனை கட்டமைப்பும் கிடையாது. பிரச்சனை என்று வந்து விட்டால் ஒவ்வொரு நோயாளியையும் மாவட்ட தலைநகரங்களுக்குதான் அலைக்கழிப்பார்கள். நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்கள் சில ஊர்களில் இருந்து, 70 கி.மீ தொலைவில் உள்ளன என்பதை நினைத்து பாருங்கள். நோயாளிகளுக்கு எவ்வளவு பெரிய அவஸ்தை.

வழியா இல்லை பூமியில்
இதற்கு பதிலாக அவரவர் தாங்கள் வசிக்கும் நகரங்களிலேயே இருந்திருந்தால் கிராமத்தில் உள்ளவர்களாவது நிம்மதியாக இருந்திருப்பார்கள். வேலை கிடையாது, எங்களுக்கு சாப்பாட்டுக்கு என்ன செய்வது.. பொழுதுபோக்கு என்ன செய்வது.. என்பதுதான், இப்படி அடித்துப் பிடித்து ஊருக்கு சென்ற ஒரு சிலரின் கேள்வியாக உள்ளது. உண்மைதான்.. வேலை இல்லை என்றால் போர் அடிக்கத்தான் செய்யும். ஆனால் சாப்பாடு வாதம் அடிபட்டுப்போன ஒன்று. ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடத்தான் தடையே தவிர, பார்சல் வாங்கிக் கொள்ளலாம், வீட்டுக்கு ஆர்டர் கொடுத்து சாப்பிடலாம். இதெல்லாம் நகர்ப்புறங்களில் உள்ள வசதிகள் தான். இதை பயன்படுத்திக்கொண்டு, இணையதளம் மூலமாக சமூகவலைத்தளங்களில் வீட்டுக்குள் இருந்தபடி காலம் கழித்து இருக்கலாம்.

சமூக பரவல் இல்லை
இதில் எஞ்சி இருப்பது ஒரே ஒரு நம்பிக்கைதான். தமிழகத்தில் இன்னும் சமூக பரவல் என்ற அளவுக்கு கொரோனா வைரஸ் போகவில்லை என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது நம்பிக்கையாக இல்லாமல் அறிவியல்பூர்வமாக உண்மையாகவும் இருந்தால், இப்படி பஸ்ஸில் கூட்டமாக சென்றவர்களால் பாதிப்பு ஏற்படாது. ஆனால் ஒருவேளை அப்படி இல்லாமல் இருந்திருந்தால்..? நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. இத்தாலியும் முதலில் இப்படித்தான் அலட்சியமாக இருந்தது. இன்று அங்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்கவில்லை. இத்தாலிக்கே அந்த கதி என்றால், இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் கொண்ட.., விழிப்புணர்வு குறைந்த.. நேரம் போகவில்லை என்பதற்காக பஸ்களில் கூட்டம் கூட்டமாக நெருக்கிக் கொண்டு போகிற, மக்களை கணிசமாக கொண்ட இந்தியாவில் இந்த நோய் பரவி விட்டால்.. சமூக பரவலாக மாறி விட்டால் என்ன ஆகும்?

இனிமேலாவது இருங்கள்
போனது போகட்டும்.. இனியாவது அவரவர் தாங்கள் இருக்கும் இடத்தில் தயவுசெய்து இருங்கள். எவ்வளவு நீங்கள் அமைதி காக்கிறீர்களோ, அவ்வளவு நாட்டுக்கு நல்லது. வேலை இழந்து தவிக்கும் ஏழைகள், தொழிலாளர்களுக்கு நல்லது. எவ்வளவு சீக்கிரம் இந்த நோய்க் கட்டுப்பாட்டுள் வருகிறதோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் வாழ்வாதாரம் திரும்பும், அடுத்தவர்கள் வயிற்றில் அடித்து சொந்த ஊருக்கு சென்று கும்மாளமிடுவது நமக்கு தேவைதானா என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.












Click it and Unblock the Notifications