ரொம்ப சந்தோஷப்படாதீங்க முதல்வரே.. உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்ல்ல அப்ப பாருங்க.. சிவி சண்முகம்
சென்னை: உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும் போது என்ன நடக்கிறது பாருங்கள் என முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு நேற்றைய தினம் தீர்மானங்களை நிராகரித்தது. இதையடுத்து நேற்றைய தினம் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றுள்ளார்.
இந்த நிலையில அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

செய்தியாளர்கள் கேள்வி
இந்த ஆலோசனை முடிந்ததும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் இல்ல மணவிழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், மற்றொரு மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி நான் பேச விரும்பவில்லை. திமுகவை அழிக்க நினைப்பவர்கள். அழிந்து போவார்கள் என்று பேசியது குறித்து சிவி சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

முதல்வர் சந்தோஷப்பட வேண்டாம்
அதற்கு அவர் , முதல்வர் மிகுந்த சந்தோஷத்தில் இருக்க வேண்டாம். அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம். ஒன்றிய பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி படிப்படியாக முன்னேறி இன்று தலைமைப் பொறுப்பிற்கு வந்துள்ளது. இது திமுகவில் சாத்தியமா என கேட்டு சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினார்.

தந்தை மகன் பேரன்
மேலும் அவர் கூறுகையில் திமுகவில் தந்தை, மகன், பேரன், கொள்ளு பேரன் என வரிசையாக பொறுப்புகளுக்கு வருவார்கள். காலம் விரைவில் வருகிறது. நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். விரைவிலேயே உங்கள் மகன் உதயநிதிக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும் போது உங்கள் இயக்கத்தில் என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம் என்றார்.

உதயநிதி ஸ்டாலின்
எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள். ஆனால் உதயநிதியோ , தலைவருக்கு (ஸ்டாலினுக்கு) தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என நிர்வாகிகளுககு அறிக்கை அனுப்பியுள்ளார். ஏற்கெனவே அமைச்சர்களாக உள்ளவர்களின் செயல்பாடுகளையும் முதல்வர் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications