"பழனிசாமி" போட்ட குண்டு.. தூள் தூளாகும் "தலை"களின் கணக்கு.. அதிமுகவில் இன்னொரு அணியா? நாளை என்னாகும்
எடப்பாடி, ஓபிஎஸ் பிளவுபட்டு கிடக்க கேசி பழனிசாமி நாளை ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்
சென்னை: கே.சி. பழனிசாமி புது பிளான் ஒன்றை செயல்படுத்தி வருகிறார்.. இதற்காக நாளை முக்கிய ஆலோசனை கூட்டத்தையும் நடத்த முடிவு செய்துள்ளது, எடப்பாடி & ஓபிஎஸ் இரு டீம்களுக்குமே கலக்கத்தை உண்டு பண்ணி வருகிறது.
அதிமுக இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கின்றன..
என்னதான் எடப்பாடி பழனிசாமிக்கு மெஜாரிட்டி ஆதரவுகள் கட்சிக்குள் இருந்தாலும், ஓபிஎஸ் அமைதியாக ஒதுங்கி செல்ல போவதில்லை என்பதால், அவர் மூலம் எந்த விதத்தில் குடைச்சல் வர போகிறது என்ற கலக்கம் எடப்பாடிக்கு இல்லாமல் இல்லை.
முக்கியமாக, தேர்தல் ஆணையத்தையும், கோர்ட்டையும் ஓபிஎஸ் அளவுக்கு அதிகமாகவே நம்பி இருக்கிறார்.. அதிலும், இலையை முடக்கக்கூடிய வாய்ப்பு நிச்சயம் இருக்கும் என்கிறார்கள்.. அதேபோல், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான உத்தரவுகளை நீதிமன்றம் இனிமேல் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்..
எல்லாவற்றிற்கும் மேலாக, மேலிடத்தின் கரிசனையும் ஆதரவும் ஓபிஎஸ்ஸுக்கு இருப்பதால், அவரை அதிமுகவில் இருந்து தவிர்க்கவே முடியாது என்பது எடப்பாடி டீமுக்கும் நன்றாக தெரியும்.. இதெல்லாம் இப்படி இருக்க, எடப்பாடி பழனிசாமி & ஓபிஎஸ் இரு தரப்பையும் பிரதமர் மோடி அழைத்து பேசி சமாதானம் செய்யாததால், அவர்கள் இணைவதில் மேலும் சிக்கல்கள் கூடியுள்ளன..
பாஜக குறியே வேற.. மோடியின் பேச்சை கேட்பாரா எடப்பாடி பழனிசாமி..? - இத்தனை மெனக்கெடலும் அதற்குத்தானா?
புதுரூட்
இப்படிப்பட்ட பரபர சூழலில், கே.சி. பழனிசாமி, ஓபிஎஸ்ஸின் முடிவில் இருந்தும் அதிருப்தி கொண்டார்.. அன்றைய தினம், பொதுக்குழு கூட்டப்பட்டு, தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டதுமே, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.. பதிலுக்கு ஓபிஎஸ்ஸும் எடப்பாடி ஆதரவாளர்களை நீக்கி, தன் ஆதரவாளர்களுக்கு பொறுப்புகளை வழங்க ஆரம்பித்தார்.. அந்தவகையில், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.சி. பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார் என்று தகவல் பரவிக் கொண்டிருக்கும்போதே, முன்னாள் எம்பியான கே.சி. பழனிசாமியோ, வேறு ரூட்டை சுடச்சுட கையில் எடுத்தார்.
சிதைத்தனர்
அதன்படி, செய்தியாளர்களை தனியாக சந்தித்து பேசினார்.. "அதிமுக பொதுச் செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய முடியும். பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்ய முடியாது.. ஓபிஎஸ், எடப்பாடி இரண்டு பேருமே அதிமுகவை சிதைத்து கொண்டிருக்கிறார்கள்.. 2 பேருமே தங்களுக்கு தகுந்தார் போல், கட்சியின் விதிகளில் பல மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.. ஆளும் கட்சியை எதிர்த்து பேச கட்சியில் ஆள் இல்லை.. இவர்களுடைய பிளவு பாஜக மற்றும் திமுகவுக்குத் தான் உதவும்..
கலர் மாறுகிறது
அதிமுகவின் எந்த அணியையும் சாராத பொது உறுப்பினர்களை வைத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தப்படும்... எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் அனைவரும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.. இவர்களால் எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும்? சின்னம் முடக்கினாலும் பரவாயில்லை.. தன்னையும் தன்னை சூழ்ந்திருப்பவர்களை பாதுகாக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்" என்று ஓபனாகவே சொல்லி இருந்தார்.
எம்ஜிஆர்
கே.சி. பழனிசாமியை பொறுத்தவரை, எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி... 40 வருட காலமாக அதிமுகவில் இருந்து வருபவர்.. சசிகலா நியமனம், அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரணைக்கு வருவதில் தீவிரம் கவனம் செலுத்தியவர் பழனிசாமி ஆவார்.. அதேசமயம், எடப்பாடி மீது நிறைய அதிருப்தி கொண்டவர் என்றாலும், ஓபிஎஸ் மீது ஓரளவு ஆதரவையும் வைத்திருப்பவர்..
உயில் ??
இன்றைய சூழலில் சசிகலா அணி, டிடிவி தினகரன் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓபிஎஸ் அணி என்று பல அணிகள் அதிமுகவில் உள்ளன.. இது மட்டுமல்லாமல் இவர்களை யாருமே பிடிக்காத, இவர்களால் அதிருப்திக்குள்ளாகி இருக்கும் எம்ஜிஆர் ஆதரவாளர்கள் அணி ஒன்றும் உள்ளது.. இந்த அணிகளால் ஒதுக்கப்பட்டு, முக்கியத்துவம் தராமல் ஏராளமான நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், இந்த அணிகளுக்குள்ளும் ஏராளமான அதிருப்தியாளர்கள் உள்ளனர்.இந்த அதிருப்தியாளர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் முயற்சியில்தான் பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.
மினி ஹால்
அந்தவகையில், நாளை காலை சென்னையில் ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளார்.. சென்னை வடபழனியில் பழனியாண்டவர் கோயில் தெருவில் உள்ள டிஜே மினி ஹாலில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கிறது.. "அதிமுகவின் எதிர்காலம், தொண்டர்களின் உரிமை பாதுகாத்தல், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒற்றைத் தலைமை, லஞ்ச ஊழல் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட அதிமுக, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் எழுதிய உயிலின்படி அவரது தொண்டர்களால் மட்டுமே தலைமை முடிவு செய்யப்பட்டு அதி முக வழிநடத்தப்பட வேண்டும், ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவோம் வாருங்கள்" என்று அழைப்பு விடுத்திருக்கிறார் கேசி பழனிச்சாமி.
பரிதாப அதிமுக
மேலும், புரட்சி தலைவர் & அம்மா வளர்த்த அதிமுக, இன்று இரட்டை இலை முடக்கத்தை நோக்கி நகர்கிறது. இதை பாதுகாப்பது தொண்டர்களால் மட்டுமே முடியும். பாஜக, திமுக மற்றும் நீதிமன்றங்களின் துணையோடு அதிமுக முடக்கத்திலிருந்து மீட்டெடுக்க வரும் 31.07.22 நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் என்றும் ட்வீட் போட்டு பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். புதிய கூட்டணியை பழனிசாமி உருவாக்க முயல்கிறார் என உறுதியாக சொல்வதா தெரியவில்லை. அதேசமயம், எம்ஜிஆரின் உயில் பற்றி அடிக்கடி கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார் பழனிசாமி..
ஓகேவா?
2 நாளைக்கு முன்புகூட, ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. அதில், "புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுக வில் பிளவு ஏற்பட்டால் 18.01.1987 அன்றைய தேதியில் அதிமுக வில் உள்ள உறுப்பினர்களில் 80% பேர் ஆதரவை பெற்றவர்கள் தலைமையில் கட்சி வழிநடத்த வேண்டும் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டுள்ளார்... அதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர். தொண்டர்களால் ஒரு தலைமையை நாம் தேர்ந்தெடுப்போம். நிச்சியமாக அது இந்த சுயநலவாதிகலும், அடிமைகலும், ஊழல்வாதிகலும் அல்லாத தலைமையை தேர்ந்தெடுப்போம் என்று பதிவிட்டிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
ஆலமரம்
அப்படியானால் கேசி. பழனிசாமியின் பிளான் என்ன? 3வது அணியை உருவாக்குகிறாரா? அல்லது அதிமுக சிதறுவதை பொறுக்க முடியாமல் இப்படி ஒரு ஏற்பாடுகளை செய்து வருகிறாரா? என்று தெரியவில்லை.. ஆனால், அதிமுகவை பொறுத்தவரை எல்லாமே தொண்டர்கள்தான்.. அந்த கட்சி இன்றுவரை ஆலமரம்போல் தழைக்க காரணமும் தொண்டர்கள்தான்.. திமுகவைவிட அதிக வாக்கு வங்கியை அதிமுக இப்போதும் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு காரணமும் தொண்டர்கள்தான். அதனால்தான், தலைமையை தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கேசி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்றே தெரிகிறது.
வீக்னஸ்
ஒருவேளை கேசி பழனிசாமி இந்த முயற்சியை மேற்கொண்டால், இதனால் அதிமுக மேலும் பலவீனமாகும் என்றே தெரிகிறது.... எப்படியோ, அதிருப்திக்கு ஆளாகி உள்ள அனைத்து அதிமுகவினரையும் ஒருங்கிணைத்து 'ஒன்றிணைந்த அதிமுக'வை உருவாக்க முயன்று வரும் கேசி பழனிசாமி, அதற்கான முதல் அடியை நாளை காலை எடுத்து வைக்க உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரத்தத்தின் ரத்தங்களிடம் ஏற்படுத்தி வருகிறது.