"இஷ்டத்துக்கு அறிவிக்க இது ஜமீன்தார் கட்சி இல்லை" கரெக்ட் டைமில் வேட்பாளரை அறிவிப்போம்..ஜெயக்குமார்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் இடையே நடக்கும் போட்டி எனவும் திமுக கூட்டணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் பணம் படைத்தவர்கள், வசூலில் கொடி கட்டி பறந்தவர்களை எல்லாம் களம் இறக்கியிருக்கிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 31 ஆம் தேதி தான் மனு தாக்கல் ஆரம்பமாகிறது. எனவே போதுமான அளவு நேரம் உள்ளது. களத்தை பொறுத்தவரை வெற்றி பெறப்போவது நாங்கள்தான். வெற்றி எங்கள் பக்கம் தான். விருப்பமனு வாங்கியிருக்கிறோம். விரைவில் ஆட்சி மன்றக் குழு கூடி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

ஜமீன்தார் கட்சி கிடையாது
திமுக மாதிரி அதிமுக ஒன்றும் சர்வாதிகாரி கட்சி கிடையாது. ஜமீன்தார் கட்சி கிடையாது. இது அரச கட்சி கிடையாது. இஷ்டத்துக்கு அறிவிக்க முடியாது. எனவே கலந்து ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். கூட்டணி தர்மத்தோடு கூட்டணி கட்சிகளை பார்த்துள்ளோம். எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தேசியக் கட்சிகள் மாநில அளவில் முடிவு செய்ய முடியது. தலைமையிடம் கேட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும். மாநில கட்சிகள் உடனடியாக சொல்லிவிடுவார்கள். அதனால் அதிகம் யோசிக்க வேண்டியது இல்லை. உரிய நேரத்தில் கண்டிப்பாக வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

சின்னம் 100 சதவீதம் எங்களுக்குத்தான்
யார் யாரெல்லாம் எங்களோடு நட்பில் இருந்தார்கள்.. கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற விவரம் அனைத்தும் உரிய நேரத்தில் வந்து விடும். இரட்டை இலை சின்னம் 100 சதவீதம் எங்களுக்குத்தான் கிடக்கும். டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு தெளிவாக உள்ளது. கட்சி எடப்பாடி தலைமையில் தான் இயங்குகிறது. எனவே ஏ பார்ம் பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே உண்டு. இரட்டை இலையும் எங்களுக்கே வரும் அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

திமுக கூட்டணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது
மேலும் ஜெயக்குமார் கூறுகையில், திமுக கூட்டணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் பணம் படைத்தவர்கள், வசூலில் கொடி கட்டி பறந்தவர்களை எல்லாம் களம் இறக்கியிருக்கிறார்கள். ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் இடையே நடக்கும் ஒரு போட்டி இது. பணநாயகம் வென்றதாக சரித்திரம் கிடையாது. ஜனநாயகம் தான் வெல்லும். ஜனநாயக அடிப்படையில் வாக்காளர்கள் முழு மனதோடு எங்களை ஆதரிப்பார்கள்.

அதிமுக ஆட்சியில்தான் நிம்மதி இருந்தது
தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை மோசமாக உள்ளது. கொலை கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது. சட்டம் ஒழுங்கு முழுமையாக மோசம் அடைந்த மாநிலமாக உள்ளது. மக்களுடைய எதிர்பார்ப்பு நிம்மதியான அமைதியான வாழ்க்கையாகத்தான் உள்ளது. அது அதிமுக ஆட்சியில்தான் கொடுக்கப்பட்டது. இதை மக்கள் ஒப்பிட்டு பார்ப்பார்கள். அதிமுக ஆட்சியில் தான் மக்களுக்கு அதிக நன்மை கிடைத்தது" என்றார்.












Click it and Unblock the Notifications