திருக்கோவிலூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: திருக்கோவிலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட கலிவரதன் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பா.ஜ.க. ஒன்றியச் செயலாளருக்கும், அவரது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கலிவரதன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. திருக்கோவிலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக கலிவரதன் போட்டியிட்டார். வாக்குப்பதிவு முடிந்த இரண்டு நாள் கழித்து 8-ம் தேதி அன்று திருவெண்ணெய்நல்லூர் பா.ஜ.க. ஒன்றியச் செயலாளராக இருக்கும் பிரபு, வாக்குப்பதிவு நிலவரம் குறித்து கலிவரதனிடம் போன் செய்து கேட்டாராம்.
அப்போது இருவருக்கும் இடையே தீவிரம் அடைந்த பேச்சு, கடைசியில் கடும் வாக்குவாதமாக மாறியதாம். பிரபுவின் பேச்சில் கலிவரதன் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க. வேட்பாளர் கலிவரதன் தனது ஆதரவாளர்கள் 9 பேருடன் சிறுவானுர் கிராமத்தில் இருக்கும் பிரபுவின் வீட்டுக்கு கோபத்துடன் கிளம்பி சென்றார்.
வீட்டில் இருந்த பிரபுவின் மனைவி செல்லம்மாளை கலிவரதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரக்குறைவாக திட்டியுள்ளனராம். மேலும் கணவர் - மனைவி இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டி உள்ளனராம். இதுகுறித்து செல்லம்மாள் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக வேட்பாளர் கலிவரதன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications