நிம்மதியை கெடுக்கும் மத்திய அரசு.. மாநில அரசுகளை கையேந்த வைக்கிறது.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை: மீனவர்களின் நலனைக் கெடுக்கும் வகையில் சாகர்மாலா திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக விமர்சித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநில அரசுகளைக் கையேந்த வைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் இருக்கும் பல்வேறு மீனவ கிராமங்களில் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

ஆய்வு
அப்போது அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "இந்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடு விரைவில் செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்படும்.

ஹெலிகாப்டர் தளம்
மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது, திடீரென பேரிடர் ஏற்படும்போது அவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. இதனால் மீனவர்கள் ஆழ்கடலில் இருக்கும்போதும்கூட அவர்களை தொடர்பு கொள்ள வசதியாக, நவீன கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்படும். மேலும், மீனவர்கள் கடலில் சிக்கிக் கொண்டால், அவர்களை மீட்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும்.

நிம்மதியை கெடுக்கும் மத்திய அரசு
மத்திய அரசு மீனவர்களின் நிம்மதியைக் கெடுக்கும் வகையில் சாகர்மாலா திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. மீனவர்கள் மற்றும் மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது. மத்திய அரசு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் சரி, அது மீனவர் நலனைக் கெடுக்கும் வகையில் இருந்தால், நிச்சயம் தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு துணையாக இருக்கும்.

கையேந்த வைக்க
ஜிஎஸ்டி, கல்வி எனப் பல துறைகளை மத்திய அரசு தனது கையில் வைத்திருக்கிறது. அப்படியிருந்தும்கூட மாநில அரசுகளைக் கையேந்தி நிற்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு தனது திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது" என்று அவர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications