குளுகுளுவென மாறிய தமிழகம் - 11 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டும் - சென்னையிலும் மழைக்கு சான்ஸ்!
சென்னை: ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. பின்னர், சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வந்த நிலையில், தற்போது, மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த 3 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.
அசோக் கெலாட் மீது அதிருப்தி.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாவின் கவனத்தை பெறும் 3 தலைவர்கள்!
கடந்த 24 மணி நேரத்தில்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 9 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. சேத்தியாத்தோப்பு, சென்னை டிஜிபி அலுவலகம் ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ. மழையும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பவானி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
நீடாமங்கலம், சென்னை நந்தனம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழையும், வல்லம், துவாக்குடி, பூந்தமல்லி, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. ஆவடி, திருச்செங்கோடு, கொரட்டூர், நாகப்பட்டினம், செம்பரம்பாக்கம், அண்ணாமலை நகர், நெய்வாசல் தென்பதி, சென்னை எம்.ஆர்.சி நகர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வானிலை அறிவிப்பு
ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று, ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் இன்று கனமழை
ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
3-ம் தேதி வரை...
ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுநாளும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல், அடுத்த 2 மற்றும் 3-ம் தேதிகளில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, வரும் 3-ம் தேதி வரை, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.