நனைகிறது தமிழகம்.. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று செம மழை
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது... இதனால் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி வருகின்றன.
மேலும், அந்த பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக 13 அணைகள், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய ஆக.5-ல் கறுப்பு உடையுடன் போராட்டமா? காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்
காவிரியில் வெள்ளம்
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்,பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் கரையோரம் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது... மேட்டூர் மற்றும் அமராவதி அணையிலிருந்து தொடர்ந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு சார்பில் எடுக்கப்பட்டது.. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக கொண்டு வந்து 49 முகாம்களில் 4035 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எந்தவித ஆபத்தும் நேர்ந்திடாத வகையில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
ஸ்டாலின் ஆய்வு
இதனிடையே, மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் அதிக அளவு உபரி நீரினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு திடீர் ஆய்வு செய்தார். திருச்சி, ஈரோடு, நாமக்கல், ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 118 வீரர்களைக் கொண்ட 3 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ள விபரங்களை முதல்வர் கேட்டறிந்தார்.
4 நாட்களுக்கு மழை
இந்நிலையில், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது.. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆக. 6-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை
வரும் 7, 8, 9-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். ஆக. 5-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 19 செ.மீ., நீலகிரிமாவட்டம் தேவாலாவில் 18 செ.மீ.,நடுவட்டத்தில் 15 செ.மீ., மேல்பவானியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தயார் நிலை
ஆக. 6-ம் தேதி (இன்று) மன்னார்வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மத்திய கிழக்கு அரபிக் கடல், வடக்கு கர்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் உள்ளது.