இடி மின்னலுடன் அதிக கனமழைக்கு வாய்ப்பு... இந்த 5 மாவட்ட மக்களுக்கு குடை அவசியம்
திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை நீடித்து வரும் நிலையில் திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு வார காலத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 14 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டுவில் 9 செமீ மழை பெய்துள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் 6 செமீ மழையும் பெய்துள்ளது. சோளிங்கர், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, சோலையாறு, வேதாரண்யம், தாளவாடி, சென்னையில் 1 செமீ மழை பெய்துள்ளது.
தஞ்சாவூரில் நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது மாலை மூன்று மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது தஞ்சை புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சாலை மணிகூண்டு கரந்தை பள்ளி அக்கரகாரம் நாஞ்சிகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை நீர் தேங்கியதன் காரணமாக தஞ்சை மேரிஸ் கார்னர் கீழ் பாலம் பகுதியில் வந்த தனியார் பேருந்து பயணிகளுடன் தண்ணீரில் சிக்கி கொண்டது டிராக்டர் உதவியுடன் பேருந்து மீட்கப்பட்டது.
இதனிடையே மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் மழை
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்று காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி,காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், தேனி, திருப்பூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதி கனமழைக்கு வாய்ப்பு
28 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

லேசான மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக வெப்பநிலை 35 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்சமாக வெப்பநிலை 25 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும்.

கடலுக்குள் செல்ல வேண்டாம்
இன்று முதல் 29ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications