சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாய் இன்று இடி மின்னலுடன் கோடை மழை பெய்ய வாய்ப்பு...அனுபவிக்கத் தயாரா?
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென்தமிழகம், உள் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் வெயிலுக்கு இதமாக கோடை மழை பெய்யும் என வானிலை மையம் ஜில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் பல மாவட்டங்கள் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. அனல் காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வெயிலுக்கு இதமாக ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. சிற்றாறு பகுதியில் 5 செமீ மழையும், புத்தன் அணை, பெருஞ்சாணி அணையில் தலா 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

இடி மின்னலுடன் மழை
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை உள் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்யாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மிதமான மழை
நாளை மறுநாள் 7ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி
ஏப்ரல் 06ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் ஓர் மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசும்
பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தென்தமிழகம், உள் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications