நேற்று காது கூசுற அளவுக்கு ஆபாச பேச்சு.. இன்று முகத்தை மூடிக்கொண்டே ஓடிய ஜோடி.. போலீசாரிடம் கண்ணீர்!
சென்னை: நேற்று இரவு காது கூசும் வகையில் போலீசாரிடம் அசிங்கமாகப் பேசி, என்னை உள்ளே வைத்தால் வேலையை விட்டே தூக்கிவிடுவேன் என எகிறிய சந்திரமோகன், இன்று முகத்தை மூடிக்கொண்டே போலீசாரிடம் கதறிய காட்சி அரங்கேறியுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மயிலாப்பூர் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அப்படி, நேற்று இரவு மெரினா கடற்கரை அருகே லூப் சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை எடுக்கும்படி காருக்குள் இருந்தவர்களிடம் போலீசார் கூறியுள்ளனர்.

காரில் இருந்த சந்திரமோகன் என்பவரும், அவருடன் இருந்த தனலட்சுமி என்ற பெண்ணும், மதுபோதையில் இருந்துள்ளனர். காரை எடுக்க முடியாது எனக் கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். சந்திரமோகன், மிக மோசமான வார்த்தைகளை சொல்லி போலீசாரை ஆபாசமாகப் பேசியிருந்தார்.
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து போலீசாரிடம் அத்துமீறிய இந்த ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர்.
பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாகப் பேசியதாகக் காவலர் சிலம்பரசன் என்பவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இவர்கள் இருவர் மீதும் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவர்கள்மீது கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதோடு இருவரையும் கைது செய்ய போலீசார் தரப்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் மதுபோதையில் போலீசாரை ஆபாசமாகப் பேசிய இருவரையும் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டபோது, "பிள்ளைகள் முன்பு என்னைக் கைது செய்து அழைத்து வந்துவிட்டீர்களே. இதற்கான தண்டனையை நிச்சயம் பெறுவீர்கள். நான் வெளியே வந்ததும் ஏதாவது செய்து கொண்டால் காவல்துறையினரே பொறுப்பு" என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
போலீசார் கைது செய்து அழைத்து வரும்போது, செய்தி ஊடகங்களைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது, சந்திரமோகன் கர்ச்சீப்பால் முகத்தை மூடிக்கொண்டு கேமராவில் சிக்கிவிடக்கூடாது என ஓடினார்.
மேலும், "நான் என்ன தவறு செய்தேன்.. நேற்று இரவு குடிபோதையில் அவ்வாறு பேசிவிட்டேன். என்னை ஏன் அடித்தீர்கள்" என கைதான சந்திரமோகன் போலீசாரிடம் அழுதுகொண்டே கண்ணீர் மல்க கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போலீசாரிடம் தகராறு செய்த சந்திரமோகன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக தடுத்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான இருவரும் கணவன் மனைவி அல்ல என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications