சென்னை உஸ்மான் சாலை பாலம்.. அடுத்த 280 நாட்களுக்கு ஹெவி டிராபிக்! போக்குவரத்து போலீஸ் அட்வைஸ்
சென்னை தி.நகரில் புதிய போக்குவரத்து மாற்றத்தினால் சிரமம் இருப்பினும் கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க இதுதான் ஒரே வழி என்று சொல்லப்படுகிறது.
சென்னை: சென்னை உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்க உள்ள நிலையில் இந்த பணிகள் முடியும் வரை அதாவது 9 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உஸ்மான் சாலை மேம்பாலம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று நீண்ட நாட்கள் கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இத்தொகுதி எம்எல்ஏ ஜெ.கருணாநிதி தமிழக அரசிடம் வலியுறுத்தியிருந்தார். இக்கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதற்கான அரசாணையை வெளியிட்டது.
உஸ்மான் சாலை மட்டுமல்லாது போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க ரூ.335கோடி செலவில் 3 இடங்களில் மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து அண்ணாசாலை சிஐடி 1வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளதால் இந்த பாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..அரசு ஊழியர்கள் வாக்குகள்..திமுகவிற்கு நிச்சயம் கிடைக்கும்..அன்பில் மகேஷ்
மாற்றம்
இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து அண்ணாசாலை சிஐடி 1வது மெயின் ரோடு வரை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை முதல் வரும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி வரை இதனை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் வழியாக அண்ணாசாலை சிஐஎ 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் இந்த வழியாக செல்ல தடை விதிக்கப்படும். இதற்கு மாற்றாக கண்ணமாபேட்டை சந்திப்பு, தெற்கு மேற்கு போக்கு சாலை, மூப்பராயண் தெரு, இணைப்பு சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்.
அண்ணாசாலை
அதேபோல தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மேட்லி சந்திப்பு, பார்கிட் சாலை, மூப்பராயணன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம். இதே அரங்கநாதன் சுரங்கப்பாதையிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சிஐடி 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் இந்த வழியில் பயணிக்க தடை விதிக்கப்படும். இதற்கு பதிலாக மேற்கு சிஐடி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணாசாலையை அடையலாம்.
ஒத்துழைப்பு
மேலும் அண்ணாசாலை சிஐடி 1வது மெயின் ரோடு சந்திப்பிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து முனையத்திற்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் இந்த சாலையில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. எனவே இந்த மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று போக்குவரத்து காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த பாதை மாற்றத்தால் வாகன நெரிசல் அதிகரிக்கும் என்றாலும் கட்டுமான பணிகள் விரைவாக முடிவடையும் என்பதால் இந்த பாதை மாற்றத்தை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
நெரிசல்
ஏற்கெனவே சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம், மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை சமாளிக்க போக்குவரத்து காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மேம்பால பணிகள் காரணமாக ஏற்பட உள்ள போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி போக்குவரத்து காவல்துறையினருக்கும் தலைவலியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.