பேசாம பாஜக அலுவலகமா மாத்திடலாம்! ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியதாக ரஜினி சொன்னதற்கு ஜோதிமணி கண்டனம்
சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகைக்கு மாற்றிவிடலாம் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்து இருக்கிறார்.
75 வது சுதந்திர தின விழா தொடர்பாக மத்திய அரசு அமைத்த குழுவில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றார்.
அங்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காஷ்மீர் பைல்ஸ் படத்தில் நடித்த அனுபம் கேர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களுடன் ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகின.
மத்திய பாஜக ஆட்சியில் ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லை... காங். எம்.பி ஜோதிமணி கடும் தாக்கு!
ஆளுநருடன் சந்திப்பு
இந்த நிலையில் டெல்லியிலிருந்து திரும்பிய ரஜினிகாந்த் நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் சனாதனம் குறித்தும் பேசி வருகிறார். அவரது பேச்சுக்களுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
ரஜினி பேட்டி
இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மரியாதை நிமித்தமாக ஆளுநர் 20 முதல் 25 நிமிடங்கள் சந்தித்து பேசினேன். ஆளுநர் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் அதிகம் நேசிக்கிறார். இங்குள்ள மக்களின் ஆன்மீக உணர்வு அவரை கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நண்மை செய்ய தயாராக உள்ளதாக அவர் சொன்னார்." என்றார்.
நோ கமெண்ட்ஸ்
ஆளுநரிடம் அரசியல் குறித்து விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், "அரசியல் பற்றி விவாதித்தோம். இப்போது அதுபற்றி சொல்ல முடியாது." என்றார். ஜி.எஸ்.டி. வரி உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது "நோ கமெண்ட்ஸ்" என்று கூறி "அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை" என்று கூறினார்.
ஜோதிமணி எதிர்ப்பு
ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியதாக ரஜினி தெரிவித்ததற்கும், ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியதற்கும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, "தமிழக பாஜக அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகைக்கு மாற்றிவிடலாம்!" என்று பதிவிட்டு இருக்கிறார்.