அசுர வேகத்தில் வந்த ஆந்திர கார்.. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கணவன், மனைவி, குழந்தை மரணம்
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே கானத்தூரில் முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது பின்னால் வந்த கார் மோதியதில், பைக்கில் பயணித்த கணவன், மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை என்பது நம்மூர் மக்கள் அதிவேகமாக செல்லும் சாலைகளில் ஒன்று. ஆனால் அந்த சாலையில் தற்போது பணிகள் நடந்து வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்றே ஆக வேண்டிய உள்ளது. அதேநேரம் அக்கரை முதல் மாகபலிபுரம் வரை சாலை நன்றாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன.

ஆனால் அப்படி அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் முன்னே செல்லும் வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. குறிப்பாக வார இறுதி நாட்களில் ஈசிஆர் சாலைகளில் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.
வாகன சோதனை: போலீசார் கடுமையான வாகன சோதனை நடத்தி வருவதால் விபத்துகள் முன்பு போல் நடப்பது இல்லை. அதேநேரம் எதிர்பாராமல் சிலரின் அதிவேக ஆசை ஒரு குடும்பத்தையே அழித்துவிடுகிறது. அப்படித்தான் சென்னை கோவளம் அருகே நடந்துள்ளது.
அணுமின் ஊழியர்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியரான தனசேகர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த ஆந்திர பதிவு எண் கொண்ட கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கல்பாக்கம் அனுமின் நிலைய ஊழியரான தனசேகர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

3 பேரும் மரணம்: இந்த விபத்தில் தனசேகர், அவரின் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் குழந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. உயிரிழந்த அணுமின் நிலைய ஊழியர் தனசேகர் மற்றும் அவரது மனைவி ,குழந்தையின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அதிவேக பயணம்: இந்நிலையில் ஆந்திர பதிவு எண் கொண்ட காரை ஓட்டி வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், கிழக்கு கடற்கரை சாலையில் கார் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாரோ ஒருவரின் அதிவேக பயணத்தால் ஒரு குடும்பமே இன்று பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications