2,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான நகரம் சென்னை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சென்னை: 2,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான நகரமாக் திகழ்கிறது சென்னை மாநகரம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பென்னேஸ்வரமடம் என்ற இடத்தில் கிடைத்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் கல்வெட்டின் 652 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியதாவது:
சென்னை பெருநகரம் மிகவும் பழமையானது தொன்மையானது. இதனுடைய வயது 380 என்று சொல்வது தவறு. இந்த நகரம் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன என்று பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொல்லியல் துறை, வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள், இலக்கியங்கள், இசை போன்ற மற்ற வடிவங்களை எல்லாம் ஒன்றாக திரட்டி அவைகளை வைத்து உலகிற்கு சென்னையின் பண்பாட்டு செல்வங்களை பற்றியும் தெரிவித்து சுற்றுலா வாய்ப்புகளை பல மடங்கு அதிகரிக்க முடியும், பல்லாவரம், திரிசூலம், அதிரம்பாக்கம், பட்டறை பெரும்புதூர் போன்ற பகுதிகளில் ஆதி மனிதன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ,பொருட்கள் கிடைத்துள்ளன.
ஆகவே சென்னை பெருநகர் மிகவும் பழமையானது என்பதில் சந்தேகமே இல்லை. வரலாற்று ஆசிரியர்கள் மதம் மற்றும் மொழி போன்ற வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் , ஆரியர்- திராவிடர் என்ற சர்ச்சைக்குள் சிக்கிக்கொள்ளாமல் ஆழ்வுகள் செய்ய வேண்டும், உண்மை நிலையை ஆராய்ந்து, பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்
தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கு அதன் பழைய பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையின் மீது ஒரு குழு முடிவெடுத்து, முதல் கட்டமாக 3,000 ஊர்களுக்கு பழைய பேர் விரைவில் வைக்கப்படும். கீழடியில் அகழாய்வுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
நவீன தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு செய்யப்படுகின்ற பணிகள் நல்ல பலன்கள் தருகின்றன.
இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் பேசினார்.
தமிழக அரசின் தொல்லியல் துறை முன்னாள் துணை கண்காணிப்பாளார் கே ஸ்ரீதரன் பேசுகையில், தமிழக அரசின் தொல்லியல் துறை 100க்கும் மேற்பட்ட இடங்களில் அக ஆழ்வு செய்துள்ளது என்றும் இதன் மூலம் சென்னை போன்ற நகரம் தொன்மையானது என்பது நிரூபிக்கப்பட்டது என்று தெரிவித்தார்
இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை தலைவர் ஆர். ரங்கராஜ் செப்டம்பர் மாதத்தை சென்னை மாதம் என்று கொண்டாடப்படும் என்ன்றார்.