சென்னை 375 … கிராமங்களின் கூட்டணியில் உருவான தலைநகரம்
சென்னை: சென்னை நகரம் இன்று தனது 375 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. சென்னையில் எத்தனையோ சிறப்புகள் உள்ளன. தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்து பிழைக்க வந்தவர்களை எல்லாம் சென்னை நகரம் அரவணைத்து, ஆதரவு தருகிறது.
இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி உருவாவதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்டு திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குக் கட்டுப்பட்டவராக பூந்தமல்லியின் நாயக்கரான வேங்கடகிரி இருந்தார். அவர்களின் பிடியில் இருந்தது இன்றைய சென்னையின் நிலம்.
ஒரு குடியிருப்பைக் கட்ட நிலம் தேடிய கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் பிரான்ஸிஸ் டேவும் ஆண்ட்ரூ ஹோகனும் புதுச்சேரி வரை கடற்கரையில் அலைந்தனர். பெரி திம்மப்பா எனும் வணிகரின் சைகை மொழிபெயர்ப்பு உதவியோடு, மனித வாடை இல்லாத சுமார் ஐந்து கி.மீ. தூரமுள்ள கடற்கரையோர நிலம் வேங்கடகிரியிடமிருந்து வாங்கப்பட்டது.
சென்னையின் ஸ்தாபகர்களாக பிரான்ஸிஸ் டே, ஆண்ட்ரூ ஹோகன், பெரி திம்மப்பா ஆகிய மூவரும் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டனர். சென்னை நகரின் முதல் குடும்பம் என்ற பெயரை பெரி திம்மப்பாவின் குடும்பம் பெற்றது. ஆனால், அவர்கள் பெயரில் ஒரு தெருகூட சென்னையில் இன்னமும் இல்லை.
1668-ல் திருவல்லிக்கேணியை உள்வாங்கிக்கொண்ட சென்னை 1688-ல் சென்னை நகராட்சியாக (அதாவது மதறாஸ் நகராட்சி) இங்கிலாந்து அரசரால் அறிவிக்கப்பட்டது. 1746-ல் பிரான்ஸ் படைகளால் சென்னைக் கோட்டை கைப்பற்றப்பட்டது. பிற்காலத்தில் பெரும்புகழ் அடைந்த ராபர்ட் கிளைவ், சென்னை நகருக்கு வெளியே ஓடிப்போய் ஒரு கோட்டையில் ஒளிந்துகொண்டார்.

ஆங்கிலேயர்களின் கையில்
வடஅமெரிக்காவில் தங்களிடம் இருந்த ஒரு தீவை பிரான்ஸுக்கு விட்டுக்கொடுத்து, சென்னையை ஆங்கிலேயர்கள் 1748-ல் மீண்டும் வாங்கினார்கள்.

மயிலாப்பூர், எழும்பூர்
ஆர்க்காடு நவாப் சாந்தோம் பகுதியை ஆங்கிலேயர்களுக்குப் பரிசாக வழங்கினார். மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை போன்றவை ஆங்காங்கே தீவுகள் போன்று தனித்து இருந்த கிராமங்கள். சென்னையின் வளர்ச்சியோடு இணைந்து கொண்டன.

எம்டன் வீசிய குண்டு
முதல் உலகப் போரின்போது ஜெர்மன் கப்பல் எம்டன் சென்னையின் மீது குண்டுவீசிவிட்டு மறைந்தது. 1942-ல் இரண்டாம் உலகப் போரின் பீதி சென்னை மக்களை வெளியேற்றியது.1943-ல் ஜப்பான் விமானங்கள் நகரில் குண்டுகளை வீசின.

மக்கள் தொகை
1901-ல் சென்னையின் மக்கள்தொகை: 5,40,000. பரப்பளவு: 70 சதுர கிலோமீட்டர். 1946-ல் சைதாப்பேட்டை நகராட்சி உட்பட வேளச்சேரி முதல் அயனாவரம் வரை பல பகுதிகள் சென்னையுடன் இணைந்தன.

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
1947-ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மெட்ராஸ் எனும் சென்னை தேர்வானது. 1950-ல் 129 சதுர கிலோ மீட்டராக சென்னை விரிந்தது.

தமிழ்நாடு
1969-ல் மெட்ராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.

சென்னையாக பெயர்மாற்றம்
1996-ல் மெட்ராஸ் மாநகரம் சென்னை என பெயர் மாற்றப்பட்டது. 2011-ல் 9 நகரங்கள், 8 பேரூராட்சிகள், 25 பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இன்றைய பெருநகரமாக சென்னை விரிவடைந்துள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம்
சென்னையின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது பழமையான சென்ட்ரல் ரயில் நிலையம். மேற்கு மாவட்டங்கள், வடமாநில மக்களின் நுழைவு வாயில் சென்ட்ரல் ரயில் நிலையம்.

எழும்பூர் ரயில் நிலையம்
தென் மாவட்ட மக்களின் நுழைவு வாயிலாக திகழ்வது எழும்பூர் ரயில்நிலையம் அழகுற பழமை மாறாமல் காட்சியளிக்கிறது.

கலங்கரை விளக்கம்
சென்னை கடற்கரையில் அழகுற அமைந்துள்ள கலங்கரை விளக்கம் சென்னையில் அடையாளமாகும்.

மெரீனா கடற்கரை
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை என்ற பெருமை பெற்ற மெரீனா கடற்கரை சென்னையின் மிக முக்கியமான அடையாளமாகும்.

மயிலையும் கோவில்களும்
சென்னை நகரம் ஒரு பக்கம் வணிக வளாகங்களும், மாடமாளிகைகளுமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் தனது பழமை மாறாமல் கோவில் திருவிழாக்கள் என தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

திருவிழா
மாரியம்மன் கோவில்களில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது ஆடி மாதங்களில் இன்றைக்கும் நடைபெறுகிறது.

மார்கழிக்கோலங்கள்
கிராமங்களைப் போல மார்கழி மாதத்தில் குளிர குளிர குளித்துவிட்டு வர்ணக் கோலமிடுவது சென்னை மகளிரின் சிறப்பம்சம்.

வடபழனியாண்டவர்
குன்றில் அமர்ந்து இருந்து பழனியாண்டவரைப்போல சென்னையில் வடபழனியாண்டவர் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சென்னையின் பெருமை
கிரமங்களின் கூட்டணியில் உருவான சென்னை மாநகரம், இன்றைக்கு கிரேட்டர் சென்னையாக உருமாறினாலும் தனது பழமை மாறாமல் இருப்பதுதான் அதன் பெருமை.












Click it and Unblock the Notifications