சர்ச்சைக்குரிய எக்ஸ் பதிவு.. தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது?
சென்னை: கலவரத்தை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆதவ் அர்ஜுனா நள்ளிரவில் அந்த பதிவை எழுதிவிட்டு, அதிகாலை நீக்கிவிட்ட நிலையில், அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தின் போது கரூரில் இருந்து வேகமாக திருச்சி வந்த விஜய், உடனடியாக தனி விமானம் மூலமாக சென்னை திரும்பினார். தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு பின் இரங்கல் பதிவை வெளியிட்ட விஜய், 3 நாட்களாகவே வாய் திறக்காமல் வீட்டிலேயே இருந்து அமைதி காத்தார்.

விஜய் மட்டுமல்லாமல் தவெகவின் நிர்வாகிகளும் அவரது ஸ்டைலில் அமைதி காத்தவர். கரூரில் பாதிக்கப்பட்ட தவெக தொண்டர்களை நேரில் சென்று கூட சந்திக்கவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி கூட செலுத்தவில்லை. அதற்கு பதிலாக சிபிஐ விசாரணை மற்றும் முன் ஜாமீன் கோரி நீதிமன்றப் படிகளை ஏறினர்.
வழக்கமாக பேனாவுடன் நேர்காணல் அளிக்கும் தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் நேற்றிரவு ஆதவ் அர்ஜுனா, இளைஞர்களின் புரட்சி நடக்க வேண்டும் என்று கலவரத்தை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த பதிவு தவெகவினர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டது.
நள்ளிரவில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட பின், அதிகளவில் கண்டனம் எழுந்ததால், அதிகாலையிலேயே அதனை நீக்கிவிட்டார். ஆனாலும் திமுக எம்பி ஆ.ராசா, அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டிவிடும் வகையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு, பின் அதனை நீக்கி இருக்கிறார்.
அவரின் கருத்து இந்திய இறையாண்மைக்கு எதிரானது. அவரின் கருத்துக்கு தமிழ்நாட்டு மக்களே எதிர்வினையாற்றி வருகிறார்கள் என்று தெரிவித்தார். இதனிடையே ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கலவரத்தை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதால் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதவ் அர்ஜுனா கைது செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே தவெக நிர்வாகிகள் 2 பேர் கரூர் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications