மாஸ்க்குகளை முறையாகப் போடுங்கள்... இல்லையென்றால் ஐசியுதான்... எச்சரிக்கும் பிரதீப் கவுர்
சென்னை: சென்னைவாசிகள் முறையாக மாஸ்க்குகளை அணியாமல் நெரிசலைத் தவிர்க்காமல் இருந்தால் 2021ஆம் ஆண்டை ஐசிய-இல் தான் தொடங்க வேண்டியிருக்கும் என்று பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றின் பரவலும் தாக்கமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், பிரிட்டனில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது சர்வதேச அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாகச் சென்னை வந்த ஒருவருக்கும் சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய வகை கொரோனா எங்கு தமிழ்நாட்டில் நுழைந்துவிடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது.
பரவும் புதிய கொரோனா... 6 வாரங்களில் தடுப்பு மருந்தை உருவாக்குவோம் - பயோஎன்டெக் நம்பிக்கை
இந்நிலையில்,சென்னைவாசிகள் கொரோனாவை மறந்துவிட்டதைப் போல தெரிவதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் விஞ்ஞானியும், பொதுச் சுகாதார நிபுணருமான பிரதீப் கவுர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "சென்னைவாசிகள் கொரோன தொற்றை முற்றிலுமாக மறந்துவிட்டதாகவே தெரிகிறது. மால்கள், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்கள் என எங்கு பார்த்தாலும் மாஸ்க் அணியாமல் இருக்கும் மக்களைப் பார்க்க முடிகிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருந்து 2021ஆம் ஆண்டை குடும்பத்துடன் நல்ல ஆரோக்கியத்துடன் தொடங்குங்கள். இல்லையென்றால் ஐ.சி.யு-இல் தான் புத்தாண்டைத் தொடங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.