கள்ளக்குறிச்சி மாணவி செல்போன் விவகாரம்! போலீசிடம் ஒப்படைக்க தந்தை மறுப்பு! நீதிபதி முக்கிய ஆர்டர்!
சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் மற்றும் அதை தொடர்ந்த வன்முறை தொடர்பான
வழக்குகள் என அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் கண்காணித்து வரும் நிலையில், தற்கொலைக்கு முன்னதாக கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்க தந்தை ராமலிங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதனை அடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பள்ளிக்குள் புகுந்து அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதோடு பேருந்துகளுக்கும் தீ வைத்தனர்.
மாணவி மர்ம மரணம்.. பற்றி எரிந்த கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி! 144 நாட்களுக்கு பின் மீண்டும் திறப்பு
கள்ளக்குறிச்சி மாணவி
கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர் பலரும் இந்த கல்வீச்சில் காயம் அடைந்த நிலையில் கலவர காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பள்ளி மாணவி ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது உடலானது இரண்டு முறை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி பெற்றோர் அவரது உடல் பெற்று சொந்த ஊரில் அடக்கம் செய்தனர்.
செல்போன் விவகாரம்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் மற்றும் அதை தொடர்ந்த வன்முறை தொடர்பான வழக்குகள் என அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலைக்கு முன்னதாக கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்க தந்தை ராமலிங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாணவி செல்ஃபோன் எதுவும் பயன்படுத்தவில்லை என மாணவி தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒப்படைக்க வேண்டும்
அப்போது நீதிபதி, மாணவியிடம் செல்ஃபோன் இருந்தும் அதனை மறுத்தால் அது சட்டப்படி தவறு எனவும் அதற்காக பெற்றோரை விசாரிக்க நேரிடலாம் எனவும் எச்சரித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி சந்திரசேகரன் முன் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி முறையீடு ஒன்றை செய்தார். அப்போது மாணவியின் செல்ஃபோனை காவல்துறையிடம் தாங்கள் ஒப்படைக்க மாட்டோம் எனவும், அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நீதிபதி உத்தரவு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் சந்தோஷ் செல்ஃபோனை பெற்றுக்கொள்ள மறுத்ததோடு செல்ஃபோனை புலன் விசாரணை நடத்தி வரும் காவல் துறையினரிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கை புலன் விசாரணை செய்து வரும் காவல்துறையிடம் செல்ஃபோனை வழங்கினால் உடனடியாக அதனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி அறிக்கை பெற முடியும் என கூறிய நீதிபதி, பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்தார். இதையடுத்து தாமதிக்காமல் செல்போனை காவல்துறையினரிடம் ஒப்படைக்க பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.