நளினியை விடுதலை செய்யக்கோரிய வழக்கு.. மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க கோரிய வழக்கில் மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கடந்த 28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,000 மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாள் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி நளினியை விடுவிக்க கோரிய மனுவை கடந்த ஏப்ரல் மாதம் 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு நிராகரித்துள்ள உத்தரவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள் மத்திய அரசையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.