என்னாச்சு.. திடீர் பரபரப்பு.. சென்னை ஐஐடியில் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு.. ஹாட்ஸ்பாட்டாக மாறியது
சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் மேலும் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளதாகவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: கொரோனா பரவல் சென்னை ஐஐடி வளாகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றினால் இன்று மேலும் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்த நிலையில், மக்கள் முகக்கவசம் கூட அணியாமல் சாலைகளில் சுற்றத் தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்று, தற்போது, பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா, டெல்லி, உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அந்தந்த மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அதிகரிப்பு
டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை நாள்தோறும் 50 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 1000 கடந்துள்ளது. தற்போது தமிழகத்திலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.

ஐஐடியில் கொரோனா தொற்று
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் கடந்த வாரம் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பின்னர் படிப்படியாக உயர்ந்து வருகிறது. வட மாநிலங்களில் வந்த மாணவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

அதிகரிக்கும் கொரோனா தொற்று
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் மேலும் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை
இதில் நான்கு பேர் இணை நோய் உள்ளவர்கள் என்று கூறிய டாக்டர் ராதாகிருஷ்ணன், 56 பேர் தரமணி கெஸ்ட் ஹவுசிலும், 49 பேர் கங்கா கெஸ்ட் ஹவுசிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூவர் தனியாகவும் ஒருவர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். டெங்கு, சிக்கன் குனியா நோய்களும் பாதிக்கப்பட்டுள்ளது. 19 வளாகங்களில் தங்கியுள்ள 7490 பேர்களில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அச்சப்பட வேண்டாம்
பாசிட்டிவிட்டி 3.57 விழுக்காடு பரவியுள்ளது. இதைப்பார்த்து அச்சப்பட தேவையில்லை. 13 மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டில் இருந்து ஒருவர் வந்துள்ளார். வெளியில் பரவாமல் நாம் தடுத்து விட்டோம் என்று கூறினார். பொதுமக்கள் யாரும் பதற்றப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என்று கூறினார்.
Recommended Video

உருமாறிய கொரோனா இல்லை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் உருமாறிய கொரோனா இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறினார். தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க திட்டமிட்டுளதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications