'ப்ளேபாய்' என நிரூபிக்க பெண்களிடம் சில்மிஷம்.. பொதுமக்களிடம் சிக்கி சின்னாபின்னமான.. சென்னை இளைஞர்
சென்னை: தன்னை ஒரு 'ப்ளேபாய்' என நிரூபிப்பபதற்காக இளைஞர் ஒருவர் அங்குள்ள பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட, பொதுமக்கள் அவரை விரட்டி விரட்டி புரட்டி எடுத்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
நம் மத்தியிலேயே சில பேர் இருப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் தன்னை ஒரு பெரிய ஆளாக நினைக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத பொய்களை எல்லாம் அவர்கள் கூறுவார்கள்.
ஒவ்வொரு நண்பர்கள் வட்டாரத்திலும், குடும்பத்திலும் இதுபோன்ற ஒரு நபராவது கட்டாயம் இருப்பர். நம்மை பற்றி இப்படி சொல்லிவிட்டோமே.. இதை எப்படியாவது 'மெய்டெய்ன்' பண்ண வேண்டுமே என அவர்கள் செய்யும் செயல்கள் சூனாபானா ரேஞ்சுக்கு தான் இருக்கும். அப்படியொரு சம்பவம்தான் சென்னையில் நடைபெற்றுள்ளது.

'ப்ளேபாய்' என பந்தா..
சென்னையை அடுத்த புழலைச் சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் பள்ளி, கல்லூரி காலங்களில் இருந்தே தனது நண்பர்களிடம் தன்னை ஒரு பெரிய 'ப்ளேபாய்' எனக் கூறி வந்திருக்கிறார். எந்த பெண்ணையும் தன்னால் மயக்க முடியும் என்ற பாணியில் அவர் நண்பர்களிடம் கதைக்கட்டி வந்துள்ளார். இதை அவரது நண்பர்களும் நம்பி வந்துள்ளனர். ஆனால் 'ப்ளேபாய்' எனக் கூறிக்கொள்கிறானே தவிர, ஒரு பெண்ணிடமும் இவன் பேசி பார்த்ததில்லையே என அவரது நண்பர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.

பெண்களை மயக்குவதாக பந்தயம்
இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தங்களின் இந்த சந்தேகம் குறித்து சுரேஷிடம் கேட்ட நண்பர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனை தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாக கருதிய சுரேஷ், தன் மீது விழுந்த இந்த களங்கத்தை துடைக்க முடிவு செய்தார். அதன்படி, அவரது நண்பர்களிடம் சுரேஷ் ஒரு பந்தயம் கட்டியுள்ளார். அதாவது, கல்லூரி மாணவிகள் முதல் நடுத்தர வயது கொண்ட பெண்கள் வரை யாரை வேண்டுமானாலும் தன்னால் பேசி மயக்க முடியும் என அவர் பந்தயம் கட்டினார். நண்பர்களும் இதற்கு ஒத்துக்கொண்டனர்.

ரவுண்டு கட்டி அடித்த மக்கள்..
இதன்பேரில், சுரேஷ் தனது நண்பர்கள் சகிதமாக புழலில் உள்ள சூரப்பட்டு பகுதிக்கு நேற்று காலை சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக ஏராளமான கல்லூரி மாணவிகளும், பெண்களும் சென்று வந்துள்ளனர். 'இப்போ பாரு மச்சான் நான் யாருனு காட்டுறேன்' என்ற ரேஞ்சுக்கு காலரை தூக்கிவிட்டுச் சென்ற சதீஷ், அங்கு சென்ற பெண்களிடம் பேச்சுக் கொடுத்தார். அவர்கள் பயந்தடித்து ஓடினார்களே தவிர, யாரும் மயங்கவில்லை. ஆஹா.. என்ன செய்வது என யோசித்த சுரேஷ், பெண்களிடம் பேசும் ஸ்டைலை மாற்றலாம் என முடிவெடுத்தார். அதன்படி, அங்கு வந்த பெண்களை சுரேஷ் தொட்டுப் பேச ஆரம்பித்தார். அவ்வளவுதான். பெண்கள் கூச்சலிட, கூடியது பெரும் கூட்டம். சிக்கி சின்னாபின்னாகும் அளவுக்கு மக்கள் சுரேஷை நையப்புடைத்தனர். இதனை பார்த்த அவரது நண்பர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தப்பியோட்டம்
தர்ம அடி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரை தரதரவென இழுத்துச் சென்று, அங்கிருந்த காவல் நிலையத்திலும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். மக்கள் ரவுண்டு கட்டி அடித்ததில் அவருக்கு வாயிலும், மூக்கிலும் ரத்தம் கொட்டியது. இதையடுத்து, போலீஸார் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், அங்கு பாதி சிகிச்சை நடந்துக்கொண்டிருந்த போதே, போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சுரேஷ் தப்பியோடினார். அவரை தற்போது போலீஸார் தேடி வருகின்றனர். 'ப்ளேபாய்' என நிரூபிப்பதற்காக இளைஞர் செய்த செயல் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications