சென்னையில் இரவு முதல் அதிகனமழைக்கு எச்சரிக்கை.. பல துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! -
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுவும் சென்னையை பெரு மழை, வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகத்தான் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. சென்னைக்கு 430 கி.மீ கிழக்கு தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து 420 கி.மீ கிழக்கு தென் கிழக்கு திசையில், காற்றழுத்த மண்டலம் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை மாலை . காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதிகனமழை பெய்யக்கூடும்
இந்த நிலையில் சென்னையில் இன்று இரவு முதல் காலை வரை அதிகனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், அதுவட மேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும்- ஸ்ரீ ஹரிகோட்ட இடையே புதுச்சேரிக்கு வடக்கே நாளை மாலை கரையை கடக்கும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை அதிகனமழை பெய்யக்கூடும்.

இங்கு கனமழைக்கான வாய்ப்பு குறைவு
புதுச்சேரி மற்றும் கடலூரில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. இதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு குறைவாக உள்ளது. அதிகபட்சமாக எண்ணுர் பகுதியில் 5 செ.மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 4 செ.மீ மழை பெய்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை அதிகமாக இருந்தாலும் காற்று குறைவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.

3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
அதி கனமழை எச்சரிக்கை இருப்பதால் நாகை, காரைக்கால், கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. இதேபோல் சென்னை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களிலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. இதே போல் பாம்பன் துறைமுகம், தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நாளை கடற்கரை கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூட செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications