ஹப்பா.. கடைசியில் தலைநகரிலும் தலைகாட்டியது.. சென்னையை குளிர்வித்த கோடை மழை!
Recommended Video
சென்னை: சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கடும் கோடை வெயிலுக்கு இடையில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தது.
தமிழகத்துக்கு பயனை அளிக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு பொய்த்து போனது. அதற்கு கடந்த முறையும் இதே நிலைதான். இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்திலேயே மக்கள் தண்ணீர் குடத்துடன் ஆர்ப்பாட்டம், மறியல் என தொடங்கிய காட்சிகள் நாம் அறிந்ததே.
இந்த நிலையில் கோடை தொடங்கிவிட்டது. ஆனால் அதற்குள்ளாகவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விடுகின்றன. இதனால் சென்னையிலும் ஆங்காங்கே தண்ணீர் கஷ்டம் தலைதூக்க தொடங்கியுள்ளது.

கோடை மழை
உள்கர்நாடகம் முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. அவ்வப்போது வெப்பசலனமும் ஏற்படுகிறது. இதனால் தமிழகத்தை நோக்கி பலமான காற்று வீசி வருகிறது. இந்த காற்றால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை மழையை உருவாக்கி வருகிறது.

ஆலங்கட்டி
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தில் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சிலர் ஆலங்கட்டிகளை எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

வானம் மேகமூட்டம்
பொதுவாக காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை ஒரு பெல்ட் என வானிலை ஆய்வு மையங்களில் குறிப்பிடுவதுண்டு. அந்த வகையில் இரு மாவட்டங்களில் மழை பெய்த பிறகு தற்போது சென்னையில் மதியம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மழை பெய்தது
மழை வருமா, வராதா என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் கடும் கோடை வெயிலால் துவண்டு போய் இருந்த சென்னை மக்கள் குளிரும் வகையில் மாலைக்கு பின் பல இடங்களில் சென்னையில் மழை பெய்தது. தாம்பரம், கிண்டி, அண்ணாசாலை, வடபழனி, பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது.












Click it and Unblock the Notifications