சென்னை.. பட்டா கத்தியுடன் பஸ்சில் சீன் போட்ட ரிட்டையர்ட் 'ரூட்டு தல!' கொத்தாக தூக்கி சென்ற போலீஸ்
சென்னை: ஓடும் பேருந்தில் பட்டா கத்தியை தரையில் தேய்த்தபடியும், கையில் சுழற்றியபடியும் சென்று கெத்து காட்டிய முன்னாள் கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கல்லூரி படிக்கும் போது செய்த இந்த சேட்டைக்காக தற்போது அந்த இளைஞர் கம்பி எண்ணி வருகிறார். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மாநிலக் கல்லூரியில் முன்னாள் 'ரூட்டு தல' என்பதும் தெரியவந்துள்ளது.
படிக்கும் காலத்தில் படிக்காமல் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு, இப்போது போலீஸ் வழக்கில் சிக்கி தன்னுடைய மொத்த எதிர்காலத்தையும் இழந்திருக்கிறார் அந்த இளைஞர்.

மாணவர்களை சீரழிக்கும்'ரூட்டு தல'
சென்னையை பொறுத்தவரை, கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடப்பது வழக்கம். இந்த மோதலுக்கான காரணத்தை பார்த்தால், "யாரு கெத்தான ரூட்டு தல" என்பது தொடர்பான மோதலாகவே அது இருக்கும். பொதுவாக, மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும், நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கும் இடையேதான் இந்த ரூட்டு தல பிரச்சினை நிலவி வருகிறது. அதாவது, தாங்கள் செல்லும் பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களில் (ரூட்), யார் மாணவர்களை வழிநடத்துகிறார்களோ அவருக்கு இந்த 'ரூட்டு தல' பட்டம் வழங்கப்படும்.

முன்னாள் 'ரூட்டு தல'
இவ்வாறு மாநிலக் கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு ரூட்டு தலயாக வலம் வந்தவர்தான் ஸ்டீபன் ராஜ். கல்லூரியில் படிக்கும் போது படிப்பதை தவிர மற்ற அனைத்து வேலைகளிலும் ஸ்டீபன் ராஜ் ஈடுபட்டிருக்கிறார். அடிதடி, மோதல் என சுற்றி வந்த ஸ்டீபன் ராஜ், பேருந்தில் பயணிக்கும் போது, பட்டா கத்தியை தரையில் தேய்த்துக் கொண்டே வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். மேலும், தனது நண்பர்களிடம் செல்போனை கொடுத்து அதை வீடியோவும் எடுக்க சொல்வாராம். பிறகு அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு கெத்தாக உணர்ந்து வந்திருக்கிறார் ஸ்டீபன் ராஜ்.

பழைய வீடியோ வைரல்
இதனிடையே, கல்லூரி படிப்பை 2021-ல் முடித்த ஸ்டீபன் ராஜ், தற்போது வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில்தான், அவரது பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலாகியது. அதில், ஸ்டீபன் ராஜ், ஓடும் பேருந்தில் பட்டா கத்தியை தரையில் தேய்த்தபடியும், கையில் சுழற்றியபடியும் செல்கிறார். யாரோ ஒருவர் பழைய வீடியோவை மறு பதிவிட அது வைரலாகி இருக்கிறது. இதையடுத்து, அந்த வீடியோவை பார்த்த பலர், அதை ட்விட்டரில் சென்னை போலீஸாருக்கு 'டேக்' செய்தனர்.

கைது நடவடிக்கை
இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜை கைது செய்துள்ளனர். மேலும், அவர் கல்லூரியில் படிக்கும் போது வைத்திருந்த 3 பட்டா கத்திகள், இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்த செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இனி வரும் காலங்களில் இதுபோல பட்டா கத்தியை வைத்திருக்கும் மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications