மாணவி படுகொலை.. புழல் சிறையில் தூங்காமல் புலம்பிய சதீஷ்! தற்கொலை எண்ணத்தால் 24 மணிநேர கண்காணிப்பு
சென்னை: சென்னையில் ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி சத்தியப்பிரியாவை ஓடும் ரயிலுக்குள் தள்ளி கொலை செய்த வழக்கில் கைதான சதீஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இரவு முழுவதும் புலம்பினார். தற்போது அவரை 24 மணிநேரமும் கண்காணிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் தற்கொலை முடிவை கைவிட செய்யும் வகையில் கவுன்சிலிங் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் மாணிக்கம் (வயது 47). இவரது மனைவி ராமலட்சுமி (43). இந்த தம்பதியின் மகள் சத்தியப்பிரியா (20).
இதில் ராமலட்சுமி ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார். மாணிக்கம் கால் டாக்ஸி ஓட்டி வந்த நிலையில் சத்தியப்பிரியா சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

ரயிலில் தள்ளி மாணவி கொலை
மாணவி சத்தியப்பிரியா தினமும் ரயிலில் கல்லூரி சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். நேற்று முன்தினம் சத்தியப்பிரியா பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்ட மர்மநபர் வேகமாக வந்த ரயிலுக்குள் தள்ளி விட்டார். இதில் ரயிலின் அடியில் சிக்கிய சத்தியப்பிரியா உடல் நசுங்கி இறந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே சத்தியப்பிரியா உயிரிழந்ததை அறிந்து அவரது தந்தை மாணிக்கமும் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒருதலைக்காதல் - வாலிபர் கைது
இதற்கிடையே சத்தியப்பிரியாவை கொலை செய்த பிறகு கொலையாளி அங்கிருந்து ஓடிவிட்டார். அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (23) என்பவர் மாணவி சத்தியப்பிரியாவை கொலை செய்தது தெரியவந்தது. இவர் ஒருதலையாக அவரை காதலித்ததும், மாணவியிடம் தகராறில் ஈடுபட்டு ரயிலுக்குள் தள்ளி கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை துரைப்பாக்கத்தில் பதுங்கிய சதீசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை சூழ்ந்து வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

புலம்பிய சதீஷ்-பாதுகாப்பு அதிகரிப்பு
இந்நிலையில் நேற்று இரவு முதல் மாணவி சத்தியப்பிரியாவை நினைத்து புலம்பி வந்துள்ளார். இரவு முழுவதும் அவர் சிறையில் தூங்காமல் புலம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சதீசுக்கு சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற கைதிகள் அவரை தாக்காமல் இருப்பதற்காகவும், அவர் தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி சிறையில் சதீசை 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் சுழற்சி முறையில் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்கொலையை தடுக்க கவுன்சிலிங்
இதுமட்டுமின்றி போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தின்போது சத்தியப்பிரியாவை கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இதனால் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் தற்கொலை எண்ணத்தில் இருந்து அவரை மீட்கும் வகையில் சிறையில் அவருக்கு கவுன்சிலிங் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications