சென்னைவாசிகள் கவனத்திற்கு.. நாளை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. மிக முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு மட்டும் 2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் மிக அதிக மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையமே எதிர்பாராத இந்த மழையால் ஒட்டுமொத்த சென்னையும் முடங்கியுள்ளது.
சென்னை நகர் பகுதிகள், புறநகர் பகுதிகளில் பேய் மழை கொட்டியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்.

மழை நின்றபாடில்லை
பல இடங்களில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியதால் அவர்களை படகுகள் மூலம் மீட்டனர். ஆனாலும் சென்னையில் இன்னும் மழை நின்றபாடில்லை. பல இடங்களில் வெள்ளநீர் வடியாத சூழ்நிலை நிலவுகிறது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கி கிடக்கின்றன. இதனால் பல இடங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் போக்குவரத்து சீராகவில்லை
பல இடங்களில் சாலைகளில் 4 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளன. கனமழை காரணமாக சென்னையில் மோசமான வானிலை நிலவுவதால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் வெள்ளநீர் தேங்கி வருவதால் மின்சார ரயில் போக்குவரத்தும் இன்னும் முழுமையாக சீராகவில்லை. வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. தாமதமாக வந்து சேருகின்றன.

தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் நாளை வார இறுதி நாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால், நாளை 11.11.2021 (வியாழன்) அன்று புறநகர் ரயில் சேவைகளான ; சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications