தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. சென்னையில் தண்ணீர் லாரிகள் 24 மணி நேரமும் இயங்கலாம்!
Recommended Video
சென்னை: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில் தண்ணீர் லாரிகள் இயங்குவதற்கான கட்டுப்பாடுகளை போலீசார் தளர்த்தியுள்ளனர்.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகள் வறண்டு போயுள்ளன.
இதனால் கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீரை சுத்திகரித்து குடிநீர் வாரியம் மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. நகருக்குள் வசிக்கும் மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் புறநகர் பகுதிகளுக்கு குடியேறி வருகின்றனர்.
8000 லாரிகள்
இந்நிலையில் சென்னை மாநகர பகுதிக்குள் தண்ணீர் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிகளுக்கான கட்டுப்பாடுகளை போலீசார் தளர்த்தியுள்ளனர். தற்போது 8000க்கும் மேற்பட்ட குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
தண்ணீர் லாரிகள்
தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் போக்குவரத்து விதிப்படி சென்னை மாநகர பகுதிகளுக்குள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இயக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் மட்டுமே லாரிகளை இயக்க வேண்டிய கட்டாயத்துக்குள் இருப்பதால் பதிவு செய்தவர்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
இதை சமாளிப்பதற்காக, சென்னை குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று மாநகர போக்குவரத்து காவல்துறையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் அறிவுறுத்தலின்படி சென்னை முழுவதும் உள்ள குடிநீர் வாரிய ஒப்பந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பகல் நேரங்களில் இயங்கலாம்
அதன்படி, நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் தடையின்றி கிடைக்கும் வகையில், சென்னையில் இயங்கி வரும் சென்னை குடிநீர் வாரிய தண்ணீர் லாரிகள் மற்றும் தனியார் லாரிகள் பகல் நேரங்களில் பயணிக்க சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை நேரக்கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
கவனமுடன் செல்ல வேண்டும்
கோடைகாலத்தை முன்னிட்டு 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், தண்ணீர் பிரச்சனை ஓரளவு குறையும் என்றாலும் பொதுமக்கள் சாலைகளில் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
வாகன ஓட்டிகள் பீதி
தண்ணீர் லாரிகளுக்கான நேரக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தண்ணீர் லாரிகளுக்கு ஆன்லைனில் புக் செய்துவிட்டு மாதக்கணக்காய் காத்திருக்கும் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். அதே நேரத்தில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்று பீதியடைந்துள்ளனர்.