சென்னையில் கொசுவை விரட்ட வீட்டில் செய்த பகீர்.. உயிரை பறித்தது.. குடும்பமே கவலைக்கிடம்
சென்னை: சென்னை பல்லாவரத்தில் கொசுவை விரட்ட புகை மூட்டம் போட்டு தூங்கியதால் ஒரு குடும்பமே மூச்சுதிணறல் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொசுவை விரட்ட போட்ட புகை மூட்டம் உயிரை பறித்து, மற்றவர்களையும் உயிருக்கு போட வைத்த சம்பவம் சென்னை பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகை மூட்டம்
சென்னை பல்லாவரம் அடுத்த, பம்மல், திருவள்ளுவர் தெரு, பொன்னி நகரில் ஒரு வீட்டில் நான்கு பேர் இரவு தூங்கியுள்ளனர். இன்று காலை வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து வீட்டில் இருந்து புகை வெளியே வரத்துவங்கியுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

குரோம்பேட்டை
தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் உள்ளே சென்று பார்த்த போது நான்கு பேர் வீட்டில் மயக்க நிலையில் இருந்துள்ளனர். நான்கு பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மூன்று பேர் கவலைக்கிடம்
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பலட்சுமி(55) என்ற பெண் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மீதமுள்ள சொக்கலிங்கம்(61), விஷால்(11), மல்லிகா(38), மூவரின் நிலை மோசமாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைகாக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தகவல்
வீட்டில் கொசு தொல்லை இருப்பதால் புகை மூட்டம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அதே போல் நேற்றிரவும் புகை போட்டுள்ளனர். இதனால் உருவான புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications