அட பாவமே..! உடல் எடையை குறைக்க வருவோருக்கு கஞ்சா கொடுத்த யோகா மாஸ்டர்.. சென்னையில் 'பரபர'
சென்னை: உடல் எடையை குறைக்க வருவாருக்கும், மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கும் கஞ்சா கொடுத்து வந்த யோகா ஆசிரியரை சென்னையில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான ஐடி இளைஞர்களை இதுபோல கஞ்சா போதைக்கு இவர் அடிமையாக்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், யாரிடமிருந்து இவர் கஞ்சா வாங்குகிறார், யார் யாருக்கெல்லாம் அதை விற்பனை செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் பருமனுக்கு ஆளாகும் இளைஞர்கள்
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ஐடி நிறுவனங்கள் அதிகரித்து வருவது நல்ல விஷயம்தான் என்றாலும், இங்கு பணிபுரியும் ஊழியர்கள் சீக்கிரமாகவே மிகுந்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி விடுகின்றனர். வேலை பளு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பின்னர், மன அழுத்தத்தையும், உடல் பருமனையும் குறைக்க அவர்கள் மருத்துவர்களை நாடுகின்றனர். சிலரோ யோகோ, உடற்பயிற்சி போன்ற இயற்கை வழிகளை தேடி செல்கிறார்கள். இதுபோன்று தங்களை தேடி வருபவர்களை இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்கிறோம் என்ற பெயரில் அவர்களை போதை பழக்கத்துக்கு ஆளாக்கும் மோசடி கும்பல் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற சம்பவம்தான் சென்னையில் அரங்கேறி இருக்கிறது.

வாகனத் தணிக்கை
சென்னையை அடுத்த தாம்பரத்தை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸார் தீவிர வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பெருங்களத்தூரை அடுத்த பீர்க்கங்கரணை பகுதியில் நேற்று இரவு போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர், போலீஸாரை பார்த்ததும் அங்கிருந்து சட்டென திரும்பிச் சென்றார்.

யோகா ஆசிரியர்
இதை கவனித்த போலீஸார், அவரை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த தோள் பையை சோதனை செய்த போது, அதில் 10 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தனீஷ் (29) என்பதும், யோகா படிப்பில் முதுநிலை படிப்பை முடித்திருப்பதும் தெரியவந்தது.

உடல் எடையை குறைக்க கஞ்சா
திருவான்மியூரை அடுத்த பாலவாக்கத்தில் தங்கியுள்ள தனீஷ், வேளச்சேரி, துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள ஜிம்களில் யோகா ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரிடம் உடல் எடையை குறைக்க வேண்டும், மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என வரும் ஐடி ஊழியர்கள் மற்றும் இளைஞர்களிடம் தனீஷ் கஞ்சாவை கொடுத்து தினமும் புகைக்கக் கூறுவாராம். இவ்வாறு கஞ்சாவுக்கு அடிமையாகிவிட்ட இளைஞர்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்று இவர் கஞ்சா வழங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, யாரிடமிருந்து இவர் கஞ்சா வாங்குகிறார், யார் யாருக்கெல்லாம் அதை விற்பனை செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications