சாட்டையை எடுத்த முதல்வர் ஸ்டாலின்.. சோஷியல் மீடியாவில் சாதி மத வக்கிரத்தை களையெடுக்க அதிரடி உத்தரவு
சென்னை : சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலைதளங்கள் முக்கியமான காரணமாக இருப்பது உள்ளபடியே முழுமையான உண்மைதான் எனவும், சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் இந்த வக்கிரங்களுக்கு எல்லா வகையிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முன் தினம் கூடியது.
மூன்றாவது நாளாக சென்னை தலைமைச் செயலகத்தில் மாநாடு நடைபெற்ற நிலையில் நண்பகல் ஒரு மணியுடன் மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

முதல்வர் அறிவுறுத்தல்
குறிப்பாக காவல்துறையினருக்கு நிறைய ஆலோசனைகளையும் , அறிவுறுத்தல்களையும் வழங்கிய முதல்வர் ஸ்டாலின், குற்றங்களை தடுக்க பாரபட்சம் பார்க்கக் கூடாது எனவும், சாதி மத மோதல்களுக்கு மத பிரச்சனைகளுக்கும் சமூக வலைதளங்கள் முக்கியமான காரணமாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மாநாட்டில் நிறைவாக பேசிய முதல்வர் ஸ்டாலின், " சாதி மத மோதல்கள் குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இங்கே விரிவாகப் பேசினார். சாதி மோதல்களை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் பார்க்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் அது சமூக ஒழுங்கு பிரச்சினை கிராமங்களில் இந்த பிரச்சனை அதிகமாக உருவாவதாக காவல்துறை கண்காணிப்பாளர் இங்கே பேசும்போது சொன்னார்.

படித்த இளைஞர்களும் காரணம்
படிக்காத இளைஞர்களால் மட்டுமல்ல படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஊரில் இருக்கிற ஒரு சிலரால் இதுபோன்ற மோதல்கள் உருவாக கூடிய சூழ்நிலை உருவாகிறது. இது போன்ற இளைஞர்களை கண்டறிந்து மன மாற்றம் செய்ய வேண்டும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் ஆக்கபூர்வ வழிகளை விளையாட்டுப் போட்டிகள், ஊர்காவல் படையில் பணி என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுவதாக நெல்லை எஸ்பி சொன்னார். அது போல மற்ற மாவட்ட நிர்வாகங்களும் செயல்படனும், இதேபோல மத மோதல்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசினார்.

மத மோதல்கள்
மத மோதல்கள் குறித்து கோவையில் இயங்குவதைப் போல சிறப்பு பிரிவு அனைத்து மாவட்டங்களில் அமைய வேண்டும் என அவர் சொன்ன ஆலோசனை நிச்சயமாக பரிசீலிக்கப்படும். ஒரு காலத்துல மதம் என்பது, மதம் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருந்தது. இப்போது அது அரசியல் நோக்கமுள்ளதாக சிலரால் மாற்றப்பட்டு விட்டது. எனவே அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் இதை தடுக்க வேண்டும்.

சமூக வலைதளங்கள் காரணம்
சாதி மோதல்களுக்கு மதப் பிரச்சினைக்களுக்கும் சமூக வலைதளங்கள் முக்கியமாக காரணமாக இருப்பதை எல்லோரும் சொன்னீர்கள். அது உள்ளபடியே உண்மைதான். இது நவீன தொழில்நுட்பம் இந்த தொழில்நுட்பத்தை நல்லதற்கும் பயன்படுத்தலாம் அழிவுக்கும் பயன்படுத்தலாம். சாதி மத வக்கிரம் பிடித்தவர்கள் அறிவுக்கு பயன்படுத்தி சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்த பாக்குறாங்க. இவங்கள முளையிலேயே நாம் களை எடுக்க வேண்டும்.

தனியே ஆலோசனை
இப்படிப்பட்ட பதிவுகளை போடுறவங்க மேல உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். சோசியல் மீடியா சென்டருக்கு புதிய அலுவலகம் தேவை என்ற திருவள்ளூர் எஸ்பி கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்றுவோம். ஒன்றிய அரசில் இருப்பதைப் போல "national media analytics center", " social media lab" ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று சொன்னார். சோசியல் மீடியா மூலமா நடக்கிற இந்த வன்மங்களுக்கு எல்லா வகையிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை காவல்துறை அதிகாரிகள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என பேசினார்.












Click it and Unblock the Notifications