சென்னை செல்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! போக்குவரத்து நெரிசலுக்கு குட் பை! வந்தாச்சு புதிய பாலங்கள்!
சென்னை: சென்னை செல்பவர்கள் பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்த நிலையில், இனி சுலபமாக தாம்பரம், விமான நிலையம், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களை அடையமுடியும்.
இதேபோல் வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கும் வகையில் புதிய பாலம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்.

முதல்வர் திறப்பு
சென்னை வேளச்சேரியில், 78.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி புறவழிச்சாலை - வேளச்சேரி-தாம்பரம் சாலை பாலப்பகுதியையும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில், 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெருங்களத்தூர் இரயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு - சென்னை வழித்தடப் பாலப்பகுதியையும் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்திருக்கிறார்.

வேளச்சேரி பஸ் ஸ்டாண்ட்
வேளச்சேரியில் விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையினை இணைத்து மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி இரண்டு அடுக்கு மேம்பாலங்களாக ஒவ்வொன்றும் 7.5 மீட்டர் அகலம் கொண்ட இருவழிதட ஒரு வழி மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

புதிய மேம்பாலம்
இதில் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைத்து 1028 மீட்டர் நீளத்தில் ரூ.67 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் அடுக்கு மேம்பாலப்பணி முடிக்கப்பட்டு, முதலமைச்சர் ஸ்டாலினால் 01.11.2021 அன்று திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது, வேளச்சேரியில், 78.49 கோடி ரூபாய் செலவில் வேளச்சேரி புறவழிச்சாலை - வேளச்சேரி - தாம்பரம் சாலையை இணைத்து 640 மீட்டர் நீளத்தில் முதல் அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், வேளச்சேரி விஜயநகர சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும். மேலும் கிண்டி, சைதாப்பேட்டை, தரமணி, வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில்நுட்ப சாலை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு இப்பாலம் பயனுள்ளதாக அமையும்.

பெருங்களத்தூர் பாலம்
அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருங்களத்தூர் இரயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு - சென்னை பாலப்பகுதி கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு பாலப்பகுதி சென்னை - செங்கல்பட்டு வழித்தட போக்குவரத்திற்கும், மற்றொரு பாலப்பகுதி செங்கல்பட்டு - சென்னை வழித்தட போக்குவரத்திற்கும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சீனிவாசராகவன் தெரு பகுதிக்கு ஒரு பாலப்பகுதியும், தாம்பரம் கிழக்கு புறவழிச் சாலை பகுதிக்கு மற்றொரு பாலப்பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பயன்
தற்போது முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு - சென்னை பாலப்பகுதி 743 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்ட இருவழிதட ஒரு வழி மேம்பாலமாகும். இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு - சென்னை மார்க்கத்தில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் தாம்பரம், சென்னை விமான நிலையம், கிண்டி, கோயம்பேடு மற்றும் சென்னையின் இதர பகுதியினைச் சேர்ந்த மக்களும் மிகுந்த பயனடைவார்கள்












Click it and Unblock the Notifications