பெண்கள் முன்னேற்றத்துக்கு காரணம் திமுக..! பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்! கல்லூரி விழாவில் பெருமிதம்!
சென்னை : திமுக ஆட்சிக்காலத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு என பல திட்டங்களை கொண்டு வந்ததும் திமுக தான் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரிக்கு A++ தரச்சான்றிதழை கல்லூரி முதல்வரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் மாணவிகள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்," பெண்களுக்கான கல்லூரியாக எஸ்ஐஇ.டி. கல்லூரி திகழ்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 3 மகளிர் கல்லூரி விழாக்களில் பங்கேற்று இருக்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்
தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு முறையும் நான் இந்த கல்லூரிக்கு வாக்களிக்க வருவேன். என்னுடைய வெற்றிக்கான வாக்கினை செலுத்திய இந்த கல்லூரியில்தான் இன்று உங்களை சந்திக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மதசார்பற்ற, சமூக நீதியை பின்பற்றும் கல்லூரியாக எஸ்.ஐ.இ.டி. கல்லூரி செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 7,500 மாணவிகள் பயிலும் கல்லூரியில் 50 சதவீதம் இஸ்லாமியர், 50 சதவீதம் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவிகள் பயில்கின்றனர்.

கல்லூரிக்கு பாராட்டு
இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களின் கல்விக்காக உழைக்கும் கல்லூரி இது. திமுக ஆட்சிக்காலத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. NAAC அமைப்பால் A++ தகுதி பெற்றமைக்கு எஸ்.ஐ.இ.டி. கல்லூரிக்கு வாழ்த்துக்கள். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் இந்த கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டது.

பெண்களுக்கான திட்டங்கள்
சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஆரம்பப் பள்ளிகளில் பெண்களைத்தான் கட்டாயமாக ஆசிரியராக நியமிக்கும் சட்டம் இப்படி பல திட்டங்களை சொல்ல முடியும்.

பெண்களுக்கு உதவித் தொகை
பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான், மகளிர் சுய உதவிக்குழுத் திட்டத்தை மறைந்த முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். அதே வழியில் பெண்களுக்கு கல்லூரி கல்வி வழங்கியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில்தான், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவியர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் பெண்கள் கல்வி நிதி உதவி திட்டத்தை அறிவித்து அதை நிறைவேற்றி வருகிறோம். தமிழக அரசைப் போலவே இந்த கல்லூரியும், பெண்களின் கல்வி உரிமைக்காக அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருவது பாராட்டுதலுக்குரியது" என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications