தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்! தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலித்திடும் வகையில், தமிழ் பரப்புரைக் கழகத்தை நாளை மாலை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ் பரப்புரைக் கழகம் மூலம் 90 நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கவும், அங்கு தமிழ் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;
பட்டும் திருந்தாத இலங்கை.. 8 தமிழக மீனவர்களுக்கு சிறை.. நீதிமன்றம் உத்தரவு - 15 நாட்கள் அடைப்பு
90 நாடுகள்
உலகில் ஏறத்தாழ 90 நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் இளந்தலைமுறையினருக்கும் தமிழ்மொழியைக் கற்பிக்கவும், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் பல முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழை எளிமையாகக் கற்பதற்கான தமிழ்ப் பாடநூல்கள், வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழைத் திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என அரசு ஆணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் அப்பணிகளுக்கு முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறை
தமிழ் வளர்ச்சித்துறையின் அறிவிப்பான தமிழ்ப் பரப்புரைக் கழகம் திட்டமானது தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் மொழியைப் பிற மொழியினரும் கற்கவும், பல்வேறு நிலைகளுக்குரிய பாடங்களைக் கற்றுத் தேர்வு எழுதி உரிய நிலைகளில் சான்றிதழ்களைப் பெறவும் தமிழ் பரப்புரைக்கழகம் திட்டங்களை உருவாக்கியுள்ளது.
தேமதுரத் தமிழோசை
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ வேண்டும் என்பதற்காக, தமிழ் மொழிப் பாடத்தைக் கையடக்கக் கருவிகளில் வழங்குவதுடன், மொழித்திறனை வளர்க்கும் பயிற்சிகள், தேர்வுகள் முதலானவற்றை மேற்கொள்ள கற்றல் மேலாண்மை அமைப்பு (Learning Management System) செயலி வடிவமைக்கப்படவுள்ளது.தமிழ்மொழியை அயலகத் தமிழர்களுக்கு இணையவழியில் கற்றுக் கொடுக்க 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாளை தொடக்க விழா
மேலும், அயல்நாடுகளில் உள்ள தன்னார்வலர்கள் முறையாகத் தமிழைக் கற்பிக்க அவர்களுக்கு ஆசிரியர் பட்டயப் பயிற்சி தொடங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த தலைமுறையினருக்கு நாட்டுப்புற மற்றும் விளையாட்டுக் கலைகளைக் கொண்டு செல்வதற்காகச் சிலம்பாட்டத்தின் அடிப்படைப் பயிற்சிகள் காணொலிகளாக வழங்கப்படுகிறது. இதனிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் நாளை (24.09.2022) மாலை 6.30 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ் பரப்புரைக் கழகம் தொடக்கவிழா நடைபெறவுள்ளது.