திசையன்விளை, வள்ளியூரில் கொரோனா சிகிச்சை மையங்கள்.. திறந்து வைத்த ஸ்டாலின்.. கிராம மக்களுக்கு பலன்
சென்னை: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் வள்ளியூர் நகரங்களில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று இவற்றை திறந்து வைத்தார். நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், சிறு நகரங்களில் உள்ளோரும், அதை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களும், நெல்லை நகரத்திற்குத்தான் கொரோனா தொடர்பான சிகிச்சை அல்லது வேறு விஷயங்களுக்கு அலைய வேண்டியுள்ளது.
தலைநகரில் அதிர்ச்சி.. மசூதியில் வைத்து.. 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மதகுரு கைது!
ராதாபுரம், கூடங்குளம் போன்ற சிறு டவுன்களில் ஏற்கனவே கொரோனா சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டாலும், அதை விட பெரிய டவுன் பகுதிகளான வள்ளியூர் மற்றும் திசையன்விளையில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் அந்த குறையை தமிழக அரசு இன்று நிவர்த்தி செய்துள்ளது. இதன் மூலம், கிராமப்புற மக்கள் தங்களுக்கு அருகாமையிலுள்ள டவுன் பகுதிகளில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திசையன்விளை, வள்ளியூர்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் உள்ள புனித அந்தோணியார் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 140 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம், வள்ளியூரில் உள்ள யுனிவர்சல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 180 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
மக்கள் அலைய வேண்டாம்
இதன்மூலம், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட வள்ளியூர் மற்றும் ராதாபுரம் வட்டார மக்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி மற்றும் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலைமாறி, இனி அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இப்புதிய கொரோனா சிகிச்சை மையங்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் அருகில் உள்ள திசையன்விளை மற்றும் வடக்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படும்.
படுக்கை வசதி விவரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 668 படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகளற்ற 1,587 படுக்கைகள், 186 அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், என மொத்தம் 2,441 படுக்கை வசதிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 8 கரோனா சிகிச்சை மையங்களில் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைகளில் 300 ஆக்சிஜன் படுக்கைகள், 231 ஆக்சிஜன் வசதிகளற்ற படுக்கைகள் மற்றும் 79 அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், என மொத்தம் 610 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அப்பாவு பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலியிலிருந்து சட்டசபைத் தலைவர் அப்பாவு, லோக்சபா உறுப்பினர் ஞான திரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி ஆர். மனோகரன், அப்துல் வகாப், முன்னாள் சட்டசபைத் தலைவர் ஆர். ஆவுடையப்பன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, ஆகியோரும், தலைமைச் செயலகத்திலிருந்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.