அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை அல்ல! அவரவர் படிப்புக்கேற்ற வேலை என்பதே அரசின் இலட்சியம்!முதல்வர் பேச்சு!
சென்னை: இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற சொல்லை இந்த 5 ஆண்டு காலத்திற்குள் நிச்சயமாக நாங்கள் போக்குவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி கூறியிருக்கிறார்.
மேலும், அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை என்று இல்லாமல் அவரவர் படிப்புக்கேற்ற வேலை வழங்க வேண்டும் என்பதை அரசு இலட்சியமாக கொண்டு செயல்படுவதாக கூறினார்.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பேசிய முதல்வர் ஸ்டாலினின் முழு உரையின் தொகுப்பு பின்வருமாறு;
இந்தியா எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளம்.. திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து! பரபர சம்பவம்
ஏக்கம் தீரும்
கையில் பட்டத்துடனும், மனதில் கனவுகளோடு, எதிர்கால வாழ்க்கையை ஏக்கத்தோடு, அதேநேரத்தில் செயல்படும் உற்சாகத்தோடு நீங்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், உங்கள் கனவுகள் உறுதியாக நிறைவேற்றப்படும். உங்களது ஏக்கங்கள் தீரும். உங்களது திறமைகளுக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.
ஏதோ ஒரு வேலை
அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை அல்ல, அனைவருக்கும் அவரவர் படிப்புக்கு ஏற்ற, தகுதிக்கு ஏற்ற வேலை வழங்கப்பட்டாக வேண்டும், அதுதான் இந்த அரசினுடைய இலட்சியம், இந்த அரசினுடைய இலக்கு. அதனால்தான், பள்ளிக் கல்வியையும், கல்லூரிக் கல்வியையும் மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படி பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கக்கூடிய மாணவர்களை, அவர்கள் விரும்புகின்ற வேலைக்கு தகுதியுடையவர்களாக உருவாக்கி வருகிறோம்.
நான் முதல்வன்
என்னுடைய கனவுத் திட்டமாக அண்மையிலே அறிவிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கக்கூடிய 'நான் முதல்வன்' என்ற திட்டம் பற்றி நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.பள்ளிப்பருவத்திலேயே வழிகாட்டு முயற்சிகளை மேற்கொண்டு கல்லூரிகளில் வளர்ச்சிக்கேற்ற பாடத்திட்டங்களை தேர்வு செய்ய உதவி செய்து வேலைவாய்ப்புக்களை உறுதிசெய்யக்கூடிய அரிய திட்டம்தான் "நான் முதல்வன்" என்கிற அந்தத் திட்டம்.
வேலைவாய்ப்பு முகாம்
இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இன்று வரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 36 பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் 297 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டிருக்கிறது. இது வரை நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 5,708 நிறுவனங்கள் கலந்து கொண்டன. 2,50,708 பேர் வேலைவாய்ப்புகளை நாடி வந்தார்கள். அவர்களில் 41 ஆயிரத்து 213 பேர் வேலை கிடைத்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், 517 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பதும் நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
வேலை இல்லை
என்னைப் பொறுத்தவரையில், நம்பர்-1 முதலமைச்சர் என்பதை விட, நம்பர்-1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலை உருவாக வேண்டும். அதற்கு "வேலை இல்லை, வேலை கிடைக்கவில்லை, வேலைவாய்ப்பைப் பெற முடியாத நிலையில் இருக்கிறேன்" என்று அந்த சொல்லை இந்த 5 ஆண்டு காலத்திற்குள் நிச்சயமாக நாங்கள் போக்குவோம் என்ற உறுதியை உங்களிடத்தில் எடுத்துச் சொல்லி, வந்திருக்கக்கூடிய உங்கள் அத்தனைப் பேருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்..