முதலமைச்சர் எனக்கு “ஃபுல் சப்போர்ட்”.. தமிழகத்தில் பணவீக்கம் குறைவு - மத்திய அரசை விளாசிய பிடிஆர்
சென்னை: மாதா மாதம் புதிய ஜிஎஸ்டி கொண்டு வருவது ஒன்றும் வித்தையில்லை என்றும், சூழலை பொறுத்து வரி விகிதங்கள் மாறுவது இயற்கையானது எனவும் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் விலை உயர்வால் பொதுமக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது. கொரோனாவால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் சர்வதேச அளவில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு.. பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது!
மாநில திட்டம்
திட்டங்களுக்கான செலவை தாண்டி கொரோனா காலத்தில் கூடுதல் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் சாமானிய மக்களின் வாங்கும் சக்தி குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். மாநில அரசுக்கு என்று சில பொருளாதார நோக்கங்கள் உள்ளன. மாநில பொருளாதார திட்டங்களை இப்படிதான் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வரையறுக்கிறது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னிடம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க சொன்னார். உங்களுக்கு முன்பே நாங்கள் குறைத்துவிட்டோம் என்று சொன்னேன். மாநில அரசுகள் இவ்வளவுதான் கடன் எடுக்க முடியும் என்று மத்திய அரசு கட்டளை இடுகிறது. அவர்களுக்கு அதுபோன்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் 18 ஆண்டுகளாக தேவையான அளவு கடன் வாங்குகிறார்கள்.
கடன்
கடன் வாங்குவதும், திட்டங்கள் செயல்படுத்துவது அனைத்தையும் நீங்களே முடிவு செய்கிறீகள் என்றால் உங்கள் திட்டங்கள் நாங்கள் சொல்வதைபோல் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். பொதுவிநியோக திட்டங்களுக்கு நாம் அதிகம் செலவழித்து உள்ளோம்.
ஜிஎஸ்டி
மத்திய அரசின் ஜிஎஸ்டி வருமானம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 37% அதிகரித்து இருக்கிறது. மாதா மாதம் புதிய ஜிஎஸ்டி கொண்டு வருவது ஒன்றும் வித்தையில்லை. சூழலை பொறுத்து வரி விகிதங்கள் மாறுவது இயற்கையானது. நாட்டின் விதிக்கப்பட்டும் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விகிதங்கள் நியாயமாக இருக்கிறதா என்பதே தற்போதைய கேள்வி.
முதலமைச்சர் ஆதரவு
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் சாமானிய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க முடியும் என்ற இலக்கில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் 7% ஆக உள்ள பணவீக்கம் தமிழ்நாட்டில் 5% ஆக உள்ளது. இதுவே நமக்கு பெரும் வெற்றி. தேவையற்ற செலவுகளை குறைத்து தேவைக்கு மட்டும் செலவழித்ததால் இது நடந்தது. நிதி அமைச்சகத்திற்கும், எனக்கும் முதலமைச்சர் முழு ஆதரவு கொடுப்பதால் நல்ல இலக்கில் செயல்பட எங்களால் முடிகிறது.