உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்! மீண்டும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை: உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என மூன்றாவது முறையாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மேலும், நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் முதல்வர் பதிவு செய்திருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், அவர் அந்த நிகழ்வில் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;
இதுதான் உங்க மதச்சார்பின்மையா? பிரதமர் மோடியை பாருங்க.. முதல்வர் ஸ்டாலின் செயலால் பொங்கிய அண்ணாமலை!
உச்சநீதிமன்ற கிளை
தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வருகை புரிந்திருக்கும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். முதலாவதாக தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்திற்கான ஒரு கிளை நீதிமன்றம் சென்னையில் அமைக்கவேண்டும்.
தமிழ் வழக்காடு மொழி
இரண்டாவதாக, நீதி கேட்டு வந்திருக்கும் மக்கள் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் தன்மையினை புரிந்துகொள்ளும் வகையில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அமையவேண்டும். மூன்றாவதாக, நீதிபதிகள் நியமனங்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் நியமனங்கள் அமைய வேண்டும்.
நீதித்துறை
இவற்றை இங்கு வருகை புரிந்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் மாண்மிகு நீதியரசர்கள் கனிவுடன் அவர்கள் இதை பரிசீலிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். எனது தலைமையிலான அரசானது சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக, சமூகநீதியின் அரசாக செயல்பட்டு வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். நீதித்துறையின் ஒரு தீர்ப்பு அல்ல, ஒற்றைச் சொல்லையும் மதிக்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
மீண்டும் கோரிக்கை
மக்களின் நல்வாழ்வுக்கு அரசும், மக்களுக்காக, நீதிக்காக நீங்களும் பணியாற்றி வருகிறீர்கள். நல்வாழ்வுடன் இணைந்ததுதான் நீதி. எனவே நீதித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும், தமிழ்நாடு அரசு எப்போதும் செய்யும் என்ற உறுதியை மீண்டும், மீண்டும் உங்களிடத்தில் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, விடைபெறுகிறேன்.